நகைக் கடன் வைப்பவர்களுக்கு அதிரடி ஆஃபர் !! இந்தியன் வங்கியின் நியூ இயர் பொங்கல் பரிசு இதோ !
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி நகைக் கடனை பற்றிய அசத்தலான ஆஃபரை வெளியிட்டுள்ளது.
நகை என்பது பெரும் மதிக்கத்தக்க சொத்தாக மாறிவிட்ட தமிழர்களின் கலாச்சாரத்தில் அவசர தேவைக்கு நகையை அடகு வைப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. தெருவுக்குத் தெரு தனியார் அடகு கடைகளும் தனியார் பைனான்ஸ் கம்பெனிகளும் இருந்தாலும் மக்கள் வங்கியை நாடுவது பாதுகாப்பின் காரணமாகவே. மேலும் தனியார் தீட்டும் வட்டி விகிதமும் கொள்ளை அடிப்பது போன்றே இருக்கின்றன. இதன் காரணமாகவே மக்கள் பெருமளவில் வங்கியை நாடி நகைக் கடனை வைக்கின்றனர். அதிலும் குறிப்பாக பொதுத்துறை வங்கிகளில் வட்டி விகிதம் குறைவாக இருக்கும் என்பதால் அதிக அளவில் மக்கள் இதை பயன்படுத்துகின்றனர்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி நகைக் கடனை பற்றிய அசத்தலான ஆஃபரை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் விவசாய பயன்பாட்டிற்காக வைக்கப்படும் நகைக்கடன்களுக்கு பரிசீலனை கட்டணத்திலிருந்து (Processing Fee) முழு விலக்கு அளிக்கப்படுகிறது. டிசம்பர் 31, 2024 முதல் ஜனவரி 31, 2025 வரை மட்டுமே இச்சலுகை இருக்கும் என வங்கி அறிவித்துள்ளது.
பரிசீலனைக் கட்டணம் என்றால் என்ன ?
பொதுவாக எந்த ஒரு கடன் பெற்றாலும் அதற்கு வங்கிகள் பரிசீலனைக் கட்டணம் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கின்றன. இது நகைக் கடனுக்கும் பொருந்தும். நகைக் கடன் தொகை சேமிப்புக் கணக்கில் ஏறிய உடனே சேமிப்பு கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்படுகின்றன அல்லது நகைக்கடன் வட்டியை திரும்ப செலுத்தும் போது சேர்த்து வசூலிக்கப்படுகின்றன. இவ்வாறு கட்டணங்கள் இருப்பதே பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு தெரியாத ஒன்று. அவர்களைப் பொறுத்தவரை " நகை மதிப்பீட்டாளருக்கு கட்டணம் கொடுத்து விட்டோமே ! இது என்ன சார்ஜஸ் ??" என்ற குழப்பமே நீடித்து வருகின்றன. மேலும் பலர், நகைக் கடன் வைத்த அன்று கவனிக்காமல் சிறிது நாட்கள் கழித்து தன்னுடைய கணக்கிலிருந்து பணம் எடுத்து விட்டதாக வங்கி ஊழியர்களிடம் புகார் கூறும் வண்ணம் இருக்கின்றனர். இது குறித்த தகவல் பலகை வங்கியில் ஆங்காங்கே ஒட்டி வைத்தால் மக்கள் விழிப்புணர்வு அடையலாம்.
பரிசீலனைக் கட்டணம் எவ்வளவு ?
பரிசீலனைக் கட்டணங்கள் வங்கிகள் பொருத்து மாறுகின்றன. கடன் தொகையில் 0.1 சதவீதத்திலிருந்து 0.5 சதவீதம் வரை வேறுபடுகின்றன. இதில் 18 சதவீதம் ஜிஎஸ்டியும் வங்கியால் வசூல் செய்யப்படுகிறது.
இந்தியன் வங்கியின் ஆஃபர்:
விவசாய பயன்பாட்டிற்காக வைக்கப்படும் நகைக் கடன்களுக்கு இந்தியன் வங்கி ஒரு லட்சம் வரையிலான கடன் தொகைக்கு 236 ரூபாயும் ஒரு லட்சத்திற்கு மேல் வைக்கப்படும் நகைகளுக்கு 0.2 சதவீதம் பரிசீலனைக் கட்டணமும் வங்கி வசூலிக்கிறது. தற்போது, அறுவடை காலமான தமிழர் பண்டிகையை ஒட்டி ஜனவரி 31 வரை இக்கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நல்ல வாய்ப்பினை மக்களிடையே பிரபலப்படுத்தவும் விரிவுபடுத்திச் செல்லவும் வங்கி ஊழியர்களிடம் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் தகவல் அறிய தங்கள் அருகில் உள்ள வங்கிக் கிளையை அணுகவும். மேலும் அந்தந்த வங்கியின் இணையதளத்திலும் சர்வீஸ் சார்ஜஸ் குறித்தான தகவல்களும் டெபாசிட் மற்றும் கடன்களுக்கான வட்டி விகிதமும் வெளியிடப்பட்டிருக்கும். அதில் நாம் இதுகுறித்து தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்