15 இடங்களை குறிவைத்த பாகிஸ்தான்.. ‘தக்க பதிலடி கொடுக்கப்பட்டது’ - தாக்கிய வீடியோவை வெளியிட்டு இந்திய ராணுவம் பதிவு!
பாகிஸ்தான் ஆயுதப்படைகள் மே 08 மற்றும் 09, 2025 அன்று இரவு மேற்கு எல்லையில் ட்ரோன்கள் மற்றும் பிற வெடிமருந்துகளைப் பயன்படுத்தி பல தாக்குதல்களை நடத்தின -வீடியோவை வெளியிட்டு இந்திய ராணுவம் பதிவு!

மே 8 மற்றும் 9 இடைப்பட்ட இரவில் ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஓ.சி) உட்பட மேற்கு எல்லையில் பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பொருத்தமான பதிலடி கொடுத்ததாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பாகிஸ்தான் ஆயுதப்படைகள் மே 08 மற்றும் 09, 2025 அன்று இரவு மேற்கு எல்லையில் ட்ரோன்கள் மற்றும் பிற வெடிமருந்துகளைப் பயன்படுத்தி பல தாக்குதல்களை நடத்தின. ஜம்மு காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் ஏராளமான போர்நிறுத்த மீறல்களையும் (CFV) மேற்கொண்டன.
அவர்கள் தொடுத்த ட்ரோன் தாக்குதல்கள் திறம்பட முறியடிக்கப்பட்டன. போர்நிறுத்த விதி மீறல்களுக்கும் பொருத்தமான பதிலடி வழங்கப்பட்டது. இந்திய ராணுவம் நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ளது. அனைத்து தீய திட்டங்களுக்கும் பலத்துடன் பதிலளிக்கப்படும்" என்று குறிப்பிட்டு இருக்கிறது.
கூடவே, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அப்பால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் பாகிஸ்தான் ஏவுகணை அழிக்கப்பட்டதைக் காட்டும் வீடியோவையும் இந்திய இராணுவம் வெளியிட்டு இருக்கிறது.
முன்னதாக, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்து’ என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. அதன் படி, முக்கிய பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 31க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முறியடித்த இந்திய ராணுவம்
இந்தத்தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் கூறியிருந்த நிலையில், இந்தியாவின் மீது பாகிஸ்தான் பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வருகிறது.
அதன் படி நேற்றைய தினம் இரவு ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட 15 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்தியது. ஆனால், இந்தத்தாக்குதல்கள் அனைத்தும் இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
பாகிஸ்தான் விமானி பிடிபட்டதாக தகவல்
ஜம்மு, பதான்கோட், உதம்பூர் மற்றும் ஜலந்தர் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ நிலைகள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளன. போர் விமானமான எஃப் -16 உட்பட பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இதில் பாகிஸ்தான் விமானி ஒருவர் இந்தியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்துள்ளன.
இந்தியாவின் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பு மேற்கு எல்லையில் பல இடங்களில் எதிரி ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதால், ஜம்மு பிராந்தியத்தில் உள்ள சத்வாரி, சம்பா, ஆர்.எஸ்.புரா மற்றும் அர்னியா ஆகிய இடங்களில் எட்டு பாகிஸ்தான் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

டாபிக்ஸ்