அதிகரித்து வரும் பதற்றம்.. பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்தியா.. வான்வழிப் பாதையை மூடி அடுத்த அதிரடி!
அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், இந்திய வான்வழிப் பாதையைப் பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.

இந்திய வான்வழிப் பாதையைப் பாகிஸ்தான் விமானங்கள் பயன்படுத்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த தடை உத்தரவு மே 23 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து அண்டை நாடான பாகிஸ்தானுடன் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், புதிய பதிலடி நடவடிக்கையாக அந்நாட்டு ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இயக்கும் விமானங்கள் இந்திய வான்வழிப் பாதையை பயன்படுத்த மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
பாகிஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட விமானங்கள், பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் மற்றும் ஆபரேட்டர்களால் இயக்கப்படும் விமானங்கள், பாகிஸ்தானியர்களுக்கு சொந்தமான அல்லது குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானங்கள், பாகிஸ்தானியர்களால் இயக்கப்படும் விமானங்களுக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தடை பாகிஸ்தானின் ராணுவ விமானங்களுக்கும் பொருந்தும் என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தடை உத்தரவு மே 23 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்
இது தொடர்பாக விமானிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் புதன்கிழமை மாலை நோட்டீஸ் அனுப்பியது. இந்த தடை உத்தரவு மே 23 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான தகவல் விமானத்துறையினருக்கு நோடம் அனுப்பப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுவாக, நோடம் என்பது விமான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு அத்தியாவசிய தகவல்களைக் கொண்ட ஒரு அறிவிப்பாகும்.
