உச்சக்கட்டத்தை எட்டும் போர் பதற்றம்.. இரவில் 15 இடங்களை குறி வைத்து தாக்கிய பாகிஸ்தான்.. பதிலடி கொடுத்த இந்தியா!
ஜம்மு, பதான்கோட், உதம்பூர் மற்றும் ஜலந்தர் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ நிலைகள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளன.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்து’ என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. அதன் படி, முக்கிய பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 31க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முறியடித்த இந்திய ராணுவம்
இந்தத்தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் கூறியிருந்த நிலையில், இந்தியாவின் மீது பாகிஸ்தான் பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வருகிறது. அதன் படி நேற்றைய தினம் இரவு ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட 15 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்தியது. ஆனால், இந்தத்தாக்குதல்கள் அனைத்தும் இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
பாகிஸ்தான் விமானி பிடிபட்டதாக தகவல்
ஜம்மு, பதான்கோட், உதம்பூர் மற்றும் ஜலந்தர் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ நிலைகள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளன. போர் விமானமான எஃப் -16 உட்பட பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இதில் பாகிஸ்தான் விமானி ஒருவர் இந்தியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்துள்ளன. பாகிஸ்தானிய தாக்குதல்களுக்கு பதிலடியாக சியால்கோட், லாகூர் மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள இராணுவ இடங்களை குறி வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது.
இந்தியாவின் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பு மேற்கு எல்லையில் பல இடங்களில் எதிரி ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதால், ஜம்மு பிராந்தியத்தில் உள்ள சத்வாரி, சம்பா, ஆர்.எஸ்.புரா மற்றும் அர்னியா ஆகிய இடங்களில் எட்டு பாகிஸ்தான் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் சுனீல் பர்த்வால் கூறும் போது, ‘ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லையில் இன்று ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் ராணுவ நிலைகள் பாகிஸ்தானைச் சேர்ந்த ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளால் குறிவைக்கப்பட்டன. அவை தடுக்கப்பட்டன. இதில் உயிரிழப்புகளோ அல்லது பொருள் இழப்புகளோ எதுவும் பதிவாகவில்லை. இந்தியா தனது இறையாண்மையை பாதுகாக்கவும், தனது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் முழுமையாக தயாராக உள்ளது.’ " என்று கூறினார்.
ஜெய்சால்மரில் பல ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் செயலிழக்க வைக்கப்பட்டதாகவும், அதே போல குஜ் பகுதியில் குறைந்தது 3 ட்ரோன்கள் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் மற்றும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஆனால், இழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.
முன்னதாக போர் பதற்றம் அதிகமாக இருந்த நிலையில், ஜம்முவிலிருந்து ஜெய்சால்மர் மற்றும் அமிர்தசரஸ் முதல் சண்டிகர் வரை என நகரங்கள் மற்றும் குக்கிராமங்களில் விமான தாக்குதல்களுக்கான சைரன்கள் ஒலிக்கப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் எல்லைப் பகுதிகளில் பள்ளிகள் மூடப்பட்டன. .

டாபிக்ஸ்