HBD Leonardo Da Vinci: மோனா லிசா உயிரோவியர் டாவின்சி இத்தனை துறைகளில் வித்தகரா?
Happy Birthday : மோனா லிசா உயிரோவியத்தை உலகுக்கு கொடுத்து புகழ்பெற்ற லியோனர்டோ டாவின்சி ஒவியர் மட்டுமல்ல இன்ஜினியர், அறிவியலாளர், தத்துவமேதை என பல துறைகளில் வித்தகர். உடற்கூறியல், உயிரியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் கற்றவர்.
லியோனார்டோ டாவின்சி, மோனா லிசா, இறுதி இரவு விருந்து போன்ற உலகின் புகழ்பெற்ற ஓவியங்களை வரைந்தவர். ஓவியர் மட்டுமல்ல இவர் பலகலை வித்தகர். ஓவியர், இன்ஜினியர், அறிவியலாளர், தத்துவ மேதை, சிற்பி மற்றும் கட்டிட கலை வல்லுனர் மற்றும் வரைவாளர் என பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்தவர். ஆனால் தனது தனிப்பட்ட ஓவியங்களாலே புகழ்பெற்றவர். இவருக்கு ஸ்ட்ராபிஸ்மஸ் என்ற கண் குறைபாடு இருந்தது. இந்த குறைபாடு கொண்ட ஒரு நபர் தான் பார்க்கும் விஷயங்களை பல்வேறு பரிணாமங்களிலும் பார்க்க முடியும். ஒரு கண்ணில் மட்டும்தான் ஒரு நேரத்தில் பார்க்க முடியும். லியோனர்டோ டா வின்சிக்கு ஒருவேளை இந்த பிரச்னை இருந்திருக்க முடியும் என்றும், அதனால்தான் அவரால் முப்பரிமாண படங்களை வரைந்திருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். மேலும் அவரின் நோட்டு புத்தக குறிப்புகளுக்காகவும் புகழ்பெற்றவர். அதில் அவர் ஓவியங்கள் வரைந்திருந்தார். வானியல், உடற்கூறியல், தாவரவியல், ஓவியம், வரைபடவியல் மற்றும் பழங்காலவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் குறிப்புகள் அதில் இடம்பெற்றிருக்கும். இது அவரிடம் இருந்த ஒரு தனித்துவமிக்க பழக்கமாகும்.
ட்ரெண்டிங் செய்திகள்
லியோனார்டோ டா வின்சி என்பது லியோணர்டோ செர் பியரொ டா வின்சி என்பதன் சுருக்கம் ஆகும். இவர் 1452ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி பிறந்தார். இத்தாலியின் டஸ்கானி பிராந்தியத்தின் வின்சி என்ற இடத்தைச் சேர்ந்தவர். இவர் 1452ம் ஆண்டு பிளாரன்ஸ் நகருக்கு குடிபெயர்ந்தார். அங்கு வெர்ரோசியோ என்ற ஓவியரிடம் பயிற்சி பெற்றார். வெர்ரோசியோவின் கிறிஸ்துவின் ஞானஸ்தானம் என்ற ஓவியத்தில் தோன்றும் தேவதையை லியோனார்டோ வரைந்தார். பின்னர் அவர் வரைந்த அர்னோ பள்ளத்தாக்கு ஓவியமே இவரது முதல் ஓவியமாகக் கருதப்படுகிறது. மிலன் பகுதியை ஆண்டு வந்த பிரபு லுடோவிகோ ஸ்ஃபோர்ஸவின் கீழ் பொறியாளர், கட்டிடக்கலை நிபுணர், சிற்பி, ஓவியராக பணியாற்றினார். பின்னர் 6ம் அலெக்ஸாண்டரின் மகன் சீசர் போர்கியாவிடம் ராணுவ கட்டுமான நிபுணராகவும், பொறியாளராகவும் பணிபுரிந்தார். ஃபிரெஞ்சு அரசர் 12ம் லூயி ஒன்றாம் ஃபாங்காய்ஸ் ஆகியோரின் கீழும் லியோணார்டோ பணியாற்றினார். மனித உடல்களின் அங்கங்களை குறித்து அவற்றை இயற்கையுடன் ஒப்பிட்டு மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையே உள்ள உறவைப் புலப்படுத்தும் விட்ருவியின் மனித ஓவியம் என்பது அவர் வரைந்த ஓவியம்தான்.
இவரது புகழ்பெற்ற மற்ற ஓவியங்கள், மோன லிசா, மடோனா, கடைசி இரவு விருந்து, மேகியின் வழிபாடு, பாறைகளின் கன்னி, ஞானஸ்நானம் செய்விக்கும் புனித ஜான், குழந்தையைத் தாங்கிய புனித ஆன் ஆகியவை ஆகும். வாழ்நாள் முழுவதும் அவர் வரைந்த ஓவியங்கள் பலவும் இன்று நாம் பயன்படுத்தும் பறக்கும் இயந்திரம், கால்குலேட்டர், டாங்க், பாரசூட் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான தொடக்கால கருத்துக்களாக அமைந்துள்ளன. ஓவியத்தில் மட்டுமின்றி அறிவியல் ஆராய்ச்சிகளிலும் லியோனர்டோ ஈடுபட்டார். பல பரீட்சார்த்த நுட்பங்களை உள்ளடக்கிய இயேசுநாதரும் அவரது சீடர்களும் தோன்றிய ‘கடைசி இரவு விருந்து’ சுவரோவியத்தை 1495ம் ஆண்டு வரைந்தார். புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் 1503ம் ஆண்டில் வரையப்பட்டது. ஞானஸ்நானம் செய்விக்கும் புனித ஜான் ஓவியமே அவர் கடைசியாக வரைந்த ஓவியம் என்று கருதப்படுகிறது. அண்மையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கனிமத்திற்கு 2011ம் ஆண்டு தாவின்சைட் என்று இவரது நினைவாக பெயரிட்டுள்ளது. சால்வதார் முண்டி என்ற ஓவியம் 450.3 மில்லியன் டாலருக்கு விற்று உலகிலேயே உயர்ந்த விலைக்கு விற்ற கலைப்பொருள் என்ற பெயரை பெற்றுள்ளது.
இவரது வாழ்க்கை ஜார்ஜியோ வாசரியின் விட்டே என்னும் வாழ்க்கை வரலாற்று நூலில் விவரிக்கப்பட்டுள்ளது. ஓவியர் மட்டுமல்ல அறிவியலாளராகவும் இருந்து மனித உடல், இயந்திரப்பொறிகள் ஆகியவற்றை வரைந்த பல்துறை வித்தகரும், புகழ்பெற்ற ஓவியருமான லியோனர்டோ டா வின்சி 1519ம் ஆண்டு மே மாதத்தில் காலமானார். அவரது பிறந்த தினத்தில் அவரை நினைவு கூறுலதில் ஹெச்.டி. தமிழ் மகிழ்ச்சி கொள்கிறது.
டாபிக்ஸ்