முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்.. உறுதிசெய்தது எய்ம்ஸ் மருத்துவமனை.. தலைவர்கள் இரங்கல்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்.. உறுதிசெய்தது எய்ம்ஸ் மருத்துவமனை.. தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. அவரது இறப்பு செய்தியை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை உறுதிசெய்தது. அவரின் மறைவுக்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் டெல்லி எய்ம்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் அவரது இறப்பு செய்தி உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், 92 வயதில் மறைந்ததை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வயது தொடர்பான மருத்துவ நிலைமைகளுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர், 26 டிசம்பர் 2024 அன்று வீட்டில் திடீரென சுயநினைவை இழந்தார். உடனடியாக திரு.மன்மோகன் சிங்குங்கு வீட்டில் உயிர்ப்பிக்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.
இரவு 8:06 மணிக்கு புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் மருத்துவ அவசர சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டார். எவ்வளவோ முயற்சி செய்தும், அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை. இரவு 9:51 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது’’ என புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மன்மோகன் சிங்கின் மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த மன்மோகன் சிங்?:
2004 முதல் 2014ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்த மன்மோகன் சிங், இந்த ஆண்டு தொடக்கத்தில் ராஜ்யசபாவில் இருந்து ஓய்வு பெற்றார். 33 ஆண்டுகளுக்குப் பிறகு, ராஜ்ய சபையில் தனது அரசியல் இன்னிங்ஸை உடல் நிலை காரணமாக முடித்துக்கொண்டார், மன்மோகன் சிங்.
இந்தியாவின் ஒரே சீக்கிய பிரதமராக இருந்த மன்மோகன் சிங், பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான அரசாங்கத்தில் ஜூன் 1991ஆம் ஆண்டில் நிதியமைச்சராகப் பதவியேற்றவர். அதன்பின், நான்கு மாதங்களுக்குப் பிறகு, 1991ஆம் ஆண்டு, ராஜ்யசபா உறுப்பினராக ஆனார்.
மன்மோகன் சிங், ஐந்து முறை அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மேல்சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் 2019ஆம் ஆண்டு ராஜஸ்தானில் இருந்து மேல்சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பணமதிப்பிழப்பை எதிர்த்த மன்மோகன் சிங்:
நாடாளுமன்றத்தில் அவர் கடைசியாக தலையிட்டது பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராகத் தான். அதை "ஒழுங்கமைக்கப்பட்ட கொள்ளை மற்றும் சட்டப்பூர்வமாக்கப்பட்ட கொள்ளை" என்று விவரித்தார்.
"2016-ல் எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட நெருக்கடியால் வேலையின்மை அதிகமாக உள்ளது மற்றும் முறைசாரா தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர், " என்று 2021 இல் ஒரு நிகழ்வில் சிங் கூறியதாக பிடிஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
மன்மோகன் சிங்கின் பூர்வீகம் மற்றும் படிப்பு:
பஞ்சாபில் செப்டம்பர் 26, 1932இல் பிறந்த மன்மோகன் சிங், 1952 மற்றும் 1954இல் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார்.
டாக்டர் மன்மோகன் சிங் 1957-ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பொருளாதார டிரிபோஸை முடித்தார். இதைத் தொடர்ந்து 1962ஆம் ஆண்டு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் டி.பில் பட்டம் பெற்றார்.
மன்மோகன் சிங் வகித்த பதவிகள்:
பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஆகியவற்றில் கற்ற பிறகு, மன்மோகன் சிங் 1971ஆம் ஆண்டு, வர்த்தக அமைச்சகத்தில் பொருளாதார ஆலோசகராக இந்திய அரசாங்கத்தில் சேர்ந்தார்.
டாக்டர் மன்மோகன் சிங் விரைவில் 1972-ல் நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக பதவி உயர்வு பெற்றார்.
UNCTAD செயலகத்தில் ஒரு குறுகிய காலத்திற்குப் பிறகு, அவர் 1987-1990 வரை ஜெனீவாவில் உள்ள தெற்கு ஆணையத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மன்மோகன் சிங், நிதி அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், பிரதமரின் ஆலோசகர் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் ஆகிய பதவிகளையும் வகித்தார்.
டாபிக்ஸ்