Dahi: இந்தியில் ‘தயிர்’ பெயர் : கடும் எதிர்ப்பால் உத்தரவை வாபஸ் பெற்றது FSSAI
Dahi: இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தனது உத்தரவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (FSSAI), தயிர் பாக்கெட்டுகளில், தயிர் என்பதை இந்தியில் தஹி என அச்சிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
பாமக நிறுவனர் ராமதாஸும், ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் இந்தியில் அச்சடிக்க கட்டாயப்படுத்துவதா? என்று கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் தனது உத்தரவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறிய இந்த விவகாரத்துக்கு FSSAI தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தயிர் பாக்கெட்டில் தஹி, மொசரு, ஜாமுத் தாத், தயிர், பெருகு ஆகிய மொழிகளில் எழுதலாம் என FSSAI வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனம், கர்நாடகத்தின் நந்தினி பால் நிறுவனம், கேரளாவின் மில்மா பால் நிறுவனம் உள்ளிட்ட பால் உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் விற்பனை செய்யும் தயிர் உறைகளில், “தஹி” என்ற இந்திச் சொல்லைத்தான் ஆகஸ்ட் - 1 ஆம் தேதி முதல் பயன்படுத்த வேண்டும். தயிர் உறைகளில் தயிரின் ஆங்கில பெயரை (‘curd’) நீக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.
ஆவின் தயிர் உறைகளில் ‘தயிர்’ என்ற சொல்லும், ‘‘curd’’ என்ற ஆங்கிலச் சொல்லும் இடம் பெற்று உள்ளன. இதில், ஆங்கில வார்த்தையை நீக்கி விட்டு, “தஹி” என்ற இந்தி சொல்லைக் கட்டாயமாக அச்சிட வேண்டும் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.
“உணவுப்பொருட்களை உறைகளில் அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அனுமதியைப் பெற வேண்டும். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, பா.ஜ.க அரசு இந்தியைத் திணிக்க இந்த அத்துமீறலில் இறங்கி உள்ளது. ஒன்றிய அரசின் அப்பட்டமான இந்தித் திணிப்புக்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு ஆகும். இத்தகைய இந்தித் திணிப்பு கடும் கண்டனத்துக்குரியது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறிப்பிட்டிருந்தார்.
டாபிக்ஸ்