இந்தியாவுடனான பதற்றத்திற்கிடையே பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் எவ்வளவு?
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  இந்தியாவுடனான பதற்றத்திற்கிடையே பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் எவ்வளவு?

இந்தியாவுடனான பதற்றத்திற்கிடையே பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் எவ்வளவு?

Pandeeswari Gurusamy HT Tamil
Published May 10, 2025 08:05 AM IST

இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்திற்கிடையில் நள்ளிரவில் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுடனான பதற்றத்திற்கிடையே பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் எவ்வளவு?
இந்தியாவுடனான பதற்றத்திற்கிடையே பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் எவ்வளவு?

சமீபத்திய வாரங்களில் ஏற்பட்ட நான்காவது நிலநடுக்கம்

தேசிய நில அதிர்வு மையத்தின் (NCS) தகவல்படி, நிலநடுக்கத்தின் மையம் 29.67 டிகிரி வடக்கு மற்றும் 66.10 டிகிரி கிழக்கு அட்சரேகை-தீர்க்கரேகையில், தரையில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது. சமீபத்திய வாரங்களில் பாகிஸ்தானில் ஏற்பட்ட நான்காவது நிலநடுக்கம் இதுவாகும். இதற்கு முன்பு மே 5 ஆம் தேதி இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

முதலில் மதியம் 12:35 மணிக்கு ஆப்கானிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர் மாலை 4:00 மணிக்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் சித்ரால் மாவட்டத்திற்கு அருகில் நில அதிர்வு உணரப்பட்டது.

ஏப்ரல் 30 ஆம் தேதியும் 4.4 ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கம் பாகிஸ்தானை உலுக்கியது. அதே நேரத்தில், மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏப்ரல் 12 ஆம் தேதி 5.8 ரிக்டர் அளவில் பதிவானது. இதன் ஆழம் வெறும் 10 கிலோமீட்டராக இருந்ததால், தொடர் நில அதிர்வுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டது.

ஆபத்தான மண்டலத்தில் அமைந்துள்ள பாகிஸ்தான்

பாகிஸ்தான் புவியியல் ரீதியாக ஆபத்தான மண்டலத்தில் அமைந்துள்ளது. ஏனெனில் இப்பகுதி இந்திய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தட்டுகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. பலூசிஸ்தான், கைபர் பக்துன்க்வா மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் போன்ற பகுதிகள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை. அதே நேரத்தில், பஞ்சாப் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகிய பகுதிகளும் நில அதிர்வு அபாயத்தில் இருந்து விடுபடவில்லை. தொடர்ந்து ஏற்படும் இந்த நில அதிர்வுகளால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

முன்னதாக பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர் ’ என்ற பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. அதன் படி, முக்கிய பயங்கரவாதிகளின் 9 முகாம்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத்தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று பாகிஸ்தான் கூறியிருந்த நிலையில், இந்தியாவின் மீது பாகிஸ்தான் பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வருகிறது. இரவு நேரங்களில் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல்களை நடத்தியது. ஆனால், இந்தத்தாக்குதல்கள் அனைத்தும் இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இந்தியாவிற்கு இடையேயான பதற்றங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அந்நாட்டு மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.