Telecom license draft: வாட்ஸ்அப், ஸ்கைப் உள்பட இணையவழி சேவைக்கு கட்டுப்பாடு
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு மசோதா 2022 வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் வாட்ஸ்அப், ஸ்கைப் உள்பட இணையவழி சேவை வழங்கும் நிறுவனங்கள் உரிமம் பெறுமாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு மசோதா 2022 என்ற பெயரில் புதிய மசோதா ஒன்றை உருவாக்கி அமல்படுத்துவதற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து இந்த மசோதாவுக்கான வரைவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் முக்கிய அம்சங்களாக, ஓடிடி இணைய தொலைத்தொடர்பு சேவைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் வாட்ஸ்அப், ஸூம், ஸ்கைப் போன்ற இணையவழி அழைப்புக்கான சேவைகள் வழங்கிட ஒன்றிய அமைச்சகத்திடம் உரிமம் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
இந்த உரிமங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக உரிமத்தை பெறுவதற்கான கட்டணத்தில் தள்ளுபடி வழங்குப்படவுள்ளது. இந்த உரிமத்துக்காக எண்ட்ரி கட்டணம், உரிமக் கட்டணம், பதிவுக் கட்டணம் உள்பட இன்ன பிற கட்டணங்கள் மற்றும் வட்டி, கூடுதல் கட்டணம், அபராதத் தொகை போன்றவற்றை நிறுவனங்கள் செலுத்த வேண்டி வரும். இந்த கட்டணங்களில் பாதி அல்லது முழு தொகையை தள்ளுபடி செய்ய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக வரைவில் கூறப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு அல்லது இணைய சேவை நிறுவனங்கள் சேவையை நிறுத்திக்கொள்வதாக உரிமத்தை திரும்ப ஒப்படைத்தால் அவர்களுக்கு கட்டணம் திருப்பித் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு அங்கீகாரம் பெற்ற ஊடகங்கள் இந்தியாவுக்குள் செய்திகளை வெளியிடுவதற்கு அரசு ஆய்வு செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அதேசமயம், தேச பாதுகாப்பு, இறையாண்மை போன்ற அம்சங்களில் இந்த விலக்கு பொருந்தாதது.
தொலைத்தொடர்பு துறையில் நவீன மற்றும் எதிர்காலத்துக்குத் தேவையான சட்டங்களை உருவாக்கவே, இந்த புதிய தொலைத்தொடர்பு மசோதா அமல்படுத்தப்படவுள்ளதாக தொலைத்தொடர்பு துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்த தொலைத்தொடர்பு மசோதாவுக்கு பொதுமக்கள் தங்களது கருத்துகள், ஆலோசனைகள் வழங்கலாம் என ஒன்றிய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை அக்டோபர் 20ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.