தொகுதி மறுவரையறை.. கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்த தமிழ்நாடு அரசு!
தொகுதி மறுவரையறை குறித்த தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வரும் மார்ச் 22 ஆம் தேதியன்று நடைபெறும் தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பதற்காக, தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா ஆகியோர் அடங்கிய குழு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று (மார்ச் 12) அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோரை சந்தித்தனர். அப்போது, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை குறித்த கூட்டத்தில் பங்கேற்க, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அழைப்பு விடுத்தனர்.
விஜயவாடா சென்ற அமைச்சர் எ.வ.வேலு!
சென்னையில் வருகிற மார்ச் 22ம் தேதியன்று தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கட்சிகளை கலந்துகொள்ள வேண்டி தமிழ்நாடு அரசு சார்பில் அழைப்பதற்காக, அமைச்சர் எ.வ.வேலு, வில்சன் எம்.பி. ஆகியோர் அடங்கிய குழு இன்று விஜயவாடா சென்றது. அங்கு ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து, தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர். தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் பல்லா சீனிவாசராவையும் சந்தித்து அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வில்சன் எம்.பி ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.
நாளை தெலங்கானா செல்லும் அமைச்சர் கே.என்.நேரு
நாளை (மார்ச் 13) தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர். இளங்கோ ஆகியோர் தெலங்கானா மாநிலம் சென்று அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட பிற கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து சென்னையில் வரும் மார்ச் 22 ஆம் தேதியன்று நடைபெறும் தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்க உள்ளனர்.
முன்னதாக, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆதரவு திரட்டுவதற்காக பிஜு ஜனதா தள கட்சித் தலைவர் நவீன் பட்நாயக்கை, தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, திமுக எம்.பி., தயாநிதி மாறன் ஆகியோர் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நேற்று (மார்ச் 11) சந்தித்தனர். அப்போது, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக சென்னையில் நடக்க உள்ள கூட்டத்தில் பங்கேற்க நவீன் பட்நாயக்குக்கு முதல்வர் மு.க. ஸ்டாலினின் அழைப்புக் கடிதத்தை அளித்தனர்.
சென்னை வருகிறார் நவீன் பட்நாயக்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், "இது ஒரு அழகான சந்திப்பு. நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள நவீன் பட்நாயக்கை முறையாக அழைப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பாக நாங்கள் இங்கு வந்துள்ளோம். நீண்ட நேரம் அவருடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. மார்ச் 22 ஆம் தேதியன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதாக அவர் கூறியுள்ளார். அவர் எங்களுடன் போராடுவார்." என்று தெரிவித்தார்.

டாபிக்ஸ்