Delhi Election Results: டெல்லியில் 3வது முறையாக காங்கிரஸ் டக் அவுட்! ஆம் ஆத்மியின் வாக்கு வங்கியையும் சரித்தது!
Delhi Election Results: முன்னதாக 2013 ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்ற தேர்தலில் 8 இடங்களில் காங்கிரஸ் கட்சி வென்று இருந்தது. 2015 மற்றும் 2020 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியால் ஒரு இடங்களை கூட வெல்ல முடியவில்லை.

Delhi Election Results: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி பின்னடைவை சந்தித்து உள்ளது. மேலும் ஆம் ஆத்மி கட்சியின் வாக்குகளையும் கணிசமாக பிரித்து உள்ளது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நிலவரம்
மொத்தமுள்ள 70 தொகுதிகளில், பாஜக 43 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி 27 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. காலை 11 மணி நிலவரப்படி, டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியின் (AAP) வாக்குகளில் கணிசமான பகுதியை காங்கிரஸ் கட்சி பிரித்து உள்ளது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் இது 6.7% வாக்குகளை காங்கிரஸ் கட்சி பெற்று உள்ளது. ஆம் ஆத்மிக்கு 43.1% வாக்குகளும், பாரதிய ஜனதா கட்சிக்கு (BJP) 47.9% வாக்குகளும் கிடைத்து உள்ளன.
கடந்த முறையை விட கூடுதல் வாக்குகள்
1998ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை டெல்லியில் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. இருப்பினும் கடந்த 2020 தேர்தலில் பெற்ற வாக்குகளை விட காங்கிரஸ் கட்சி கூடுதல் வாக்குகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, 2020 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 4.3% வாக்குகளை பெற்று இருந்தது. இந்த நிலையில் தற்போது வரை காங்கிரஸ் கட்சி வாக்குகளில் 6.8% வாக்குகளை பெற்று உள்ளது.
2 தொகுதிகளில் 2ஆம் இடம்!
தேர்தல் ஆணையத்தின் தரவுகளின்படி, காங்கிரஸ் கட்சி சாந்தினி சௌக் மற்றும் கஸ்தூர்பா நகர் தொகுதிகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது. முன்னதாக 2013 ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்ற தேர்தலில் 8 இடங்களில் காங்கிரஸ் கட்சி வென்று இருந்தது. 2015 மற்றும் 2020 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியால் ஒரு இடங்களை கூட வெல்ல முடியவில்லை.
27 ஆண்டுகளுக்கு பின் பாஜக முன்னிலை
1998ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. அவ்வாண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை ஷீலா தீக்ஷித் டெல்லியின் முதலமைச்சராக இருந்தார். நீண்டகாலம் டெல்லி முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை வென்றது. 48 நாட்கள் ஆட்சி நடத்திய பிறகு தனது பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். ஆனால் 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களை வென்று கெஜ்ரிவால் ஆட்சி அமைத்தார். அடுத்து நடைபெற்ற 2020ஆம் ஆண்டில் 62 இடங்களைப் பெற்று மீண்டும் முதலமைச்சர் ஆனார். இலவச மின்சாரம், சிறந்த பள்ளிகள், இலவச மருத்துவமனைகள் உள்ளிட்ட திட்டங்கள் டெல்லி மக்களின் ஆதரவை பெற்றுத் தந்தது. இந்த நிலையில் தற்போது நடைபெறும் தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
