PM Modi Speech: 'ராஜஸ்தானில் அனைத்து தேர்வு வினாத்தாள்களையும் விற்றது காங்கிரஸ்': பிரதமர் மோடி தாக்கு
பாஜக ஆட்சிக்கு வந்தால் வினாத்தாள் கசிவில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.
அனைத்துத் தேர்வுகளுக்கு வினாத்தாள்களை காங்கிரஸ் விற்கிறது என்று பிரதமர் மோடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் மோடி, மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தால், வினாத்தாள் கசிவில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவாதம் அளிப்பதாகக் கூறினார்.
“நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் கல்வி நோக்கங்களுக்காக கோட்டாவுக்கு வருகிறார்கள்,” என்று பிரதமர் கூறினார். “காங்கிரஸ் கட்சி கடந்த 5 ஆண்டுகளில் இளைஞர்களின் கனவுகளை மீண்டும் அழித்துவிட்டது. காங்கிரஸ் அனைத்து தேர்வுகளுக்கான வினாத்தாள்களை விற்றது. இதில் தொடர்புடையவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இது மோடியின் உத்தரவாதம்” என்று அவர் மேலும் கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் நீடித்தால் மாநிலத்திற்கு மேலும் மோசமாகும் என்றார்.
தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் (பிஎஃப்ஐ) பேரணிகள் அரசின் அனுமதியுடன் வெளிப்படையாக நடத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
"முழு போலீஸ் பாதுகாப்புடன் PFI பேரணி நடத்தப்படுகிறது; அத்தகைய காங்கிரஸ் அரசாங்கம் எவ்வளவு காலம் ஆட்சியில் நீடிக்கிறதோ, அவ்வளவு அதிகமாக அது ராஜஸ்தானில் சேதத்தை ஏற்படுத்தும்" என்று பிரதமர் கூறினார்.
பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் ISIS போன்ற உலகளாவிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் PFI கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.
கெலாட் அரசு மீது ராஜஸ்தான் மக்கள் "தீவிர கோபத்தில்" இருப்பதாகவும் மோடி கூறினார்.
"ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக இவ்வளவு கடுமையான கோபத்தை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. ராஜஸ்தான் இளைஞர்கள் காங்கிரஸிடம் இருந்து விடுதலையை விரும்புகிறார்கள். ராஜஸ்தானின் பெண்கள், விவசாயிகள், வியாபாரிகள், வணிகர்கள் மற்றும் கடைக்காரர்கள் அனைவரும் காங்கிரஸிடம் இருந்து விடுதலையை விரும்புகிறார்கள்" என்றார்.
ராஜஸ்தானில் நவம்பர் 25ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
2013ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 163 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
2018ல் நடந்த அடுத்த சட்டசபை தேர்தலில், 200 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில், காங்கிரஸ் 100 இடங்களிலும், பாஜக 73 இடங்களிலும் வெற்றி பெற்றது. இறுதியில் பிஎஸ்பி எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் கெலாட் முதல்வராக பதவியேற்றார்.
டாபிக்ஸ்