மனைவியை பிற பெண்களுடன் ஒப்பிடுவது மனரீதியான கொடுமை - கேரளா உயர்நீதிமன்றம்
13 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்த தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்கிய குடும்பநல நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்த கணவருக்கு, மனைவியை பிற பெண்களுடன் ஒப்படுவது மனரீதியாக கொடுமைபடுத்துதல் எனக் கூறி விவாகரத்தை உறுதி செய்து கேரளா நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 2009ஆம் ஆண்டு கேரளாவை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர், திருமணம் ஆன சில மாதங்களில் விவாகரத்து கோரி கொச்சி குடும்பநல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், "திருமணம் ஆனது முதலே எனது கணவர் நான் உடல் ரீதியாக கவர்ச்சியாக இல்லை எனக் கூறி கேலி செய்தார். மற்ற பெண்களைப் போல இல்லை என்றும், அவரது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார்போல் இல்லை என்றும் கூறி அவமதித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
நான் கவர்ச்சியாக இல்லை என்ற காரணத்தால் உடலுறவு கொள்வதைத் தவிர்த்து வந்தார். ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த போதிலும் எங்களுக்குள் மனரீதியான பந்தம் உறுதியாக ஏற்படவில்லை. எங்களது திருமண உறவு முழுமை அடையாமல் இருப்பதால் விவாகரத்து அளிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு 13 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டது. அதில், மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, 13 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்த தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்கி கொச்சி குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து அந்த பெண்மணியின் கணவர் கேரளா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணையில், "மனைவியை மற்ற பெண்களுடன் ஒப்பிடுவதும், தனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு இல்லை என்று தொடர்ந்து கேலி செய்வதும், மனரீதியாக கொடுமைபடுத்துவதாகும். இந்த கொடுமைகளை எந்த பெண்ணாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை தொடர்ந்து கடைபிடிப்பது ஒழுக்கமின்மைக்கு வழிவகுப்பதோடு, சமூகத்துக்கும் தீங்கு விளைவிக்கும்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.
பின் கணவரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்தனர். அத்துடன் அந்த உத்தரவில் இருந்த முழுமை இல்லாத பந்தம் என்பதை நீக்கி, கணவரின் மனரீதியாக கொடுமை படுத்தியதன் காரணமாக விவாகரத்து வழங்கப்பட்ட என மாற்றினர்.