Budget 2024: இந்த 9 விஷயங்களில்தான் பட்ஜெட்டில் முன்னுரிமை! அடித்து ஆடிய நிர்மலா சீதாராமன்! அதிர்ந்த நாடாளுமன்றம்!
Budget 2024: ஒன்பது முன்னுரிமைகளில் உற்பத்தி, வேலைகள், சமூக நீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, புதுமை மற்றும் சீர்திருத்தங்கள் ஆகியவை அடங்கும்.

கூட்டணி கட்சிகள் ஆதரவு உடன் மூன்றாவது முறையாக பொறுப்பு ஏற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, இன்று தனது முதல் இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தது.
நிர்மலா சீதாராமன் உரை
நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் மீது இந்திய மக்கள் நம்பிக்கை வைத்து, வரலாற்று சிறப்புமிக்க மூன்றாவது முறையாக அதை மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர். ஏழைகள், பெண்கள், விவசாயிகள், இளைஞர்களை மையப்படுத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
9 முன்னுரிமைகள்
ஒன்பது முன்னுரிமைகளில் உற்பத்தி, வேலைகள், சமூக நீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, புதுமை மற்றும் சீர்திருத்தங்கள் ஆகியவை அடங்கியதாக இருக்கும் என தெரிவித்த அவர், காலநிலையை எதிர்க்கும் விதைகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சியின் விரிவான மதிப்பாய்வை அரசாங்கம் மேற்கொள்கிறது என தெரிவித்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவார்கள் என்ற அவர், உற்பத்தியை அதிகரிக்க பெரிய அளவிலான காய்கறி உற்பத்தி கிளஸ்டர்கள் ஊக்குவிக்கப்படும் என்று கூறினார்.
விலைவாசி கட்டுக்குள் உள்ளது
32 வயல் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு புதிய 109 அதிக மகசூல் தரக்கூடிய, காலநிலையை எதிர்க்கும் விதைகளை அரசாங்கம் வெளியிடும் என்ற அவர், பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நாட்டில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது. பிரதமர் மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் மீதான மக்களின் நம்பிக்கைதான் 3வது தேர்தல் வெற்றி. 2024 பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நடுத்தர மக்களின் நலன், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படும் . அடுத்த 5 ஆண்டுகளில், 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடுக்காக 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படவுள்ளது .
80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் 'பிஎம் கரீப் அன்ன யோஜனா' திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். தனி நபர்களுக்கான வருவாயில் ரூ.3 லட்சம் வரை வரி விதிப்பு கிடையாது. ரூ.3-ரூ.7 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படும். 7 லட்சம் முதல் 10 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 10 சதவீதமும் ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15 சதவீதம் வரி விதிக்கப்படும்.ரூ. 12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 20 சதவீதம் வரி விதிக்கப்படும். ரூ.15 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு 30 சதவீதம் வதி விதிக்கப்படும் என்று நிதியமைச்சர் கூறினார்.
வரிகள் குறைப்பு
தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. செல்போன் மற்றும் சார்ஜர்களுக்கான சுங்கவரி 15 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது.
ஆந்திராவுக்கு சிறப்பு திட்டம்
ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டமான பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாகவும் நிதியமைச்சர் கூறி உள்ளார்.

டாபிக்ஸ்