பில்கிஸ் பானோ வழக்கு: விடுதலையான குற்றவாளிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு
2002ஆம் ஆண்டு கர்ப்பிணி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகளும் குஜராத் அரசின் சிறப்பு அதிகாரத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
அகமதாபாத்: குஜராத் கலவரத்தின் போது கர்ப்பிணி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறையில் இருந்து விடுதலையான ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்
குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு மிகப்பெரிய கலவரம் வெடித்தது. அப்போது 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானே என்ற இஸ்லாமிய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். அவரது 3 வயது குழந்தை உள்பட குடும்பத்தினர் 7 பேர் கொலைசெய்யப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் 2004ஆம் ஆண்டு 5 போலீஸார் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் 11 பேரும் குற்றவாளிகள் என்று நிரூபணமானதைத் தொடர்ந்து 11 பேருக்கும் 2008ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கி மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் 11 பேரும் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் பாலியல் வன்கொடுமை வழக்கில் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
இந்தநிலையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த குற்றவாளிகளில் ஒருவர் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளியின் தண்டனையை ரத்துசெய்வது குறித்துப் பரிசீலிக்குமாறு குஜராத் அரசை கேட்டுக்கொண்டது.
அதைத் தொடர்ந்து, குஜராத் மாநில அரசு பஞ்சமஹால் மாவட்ட ஆட்சியர் சுஜல் மயாத்ரா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. அந்த குழுவினர் 11 பேரையும் விடுதலை செய்ய ஏகமனதாக முடிவெடுத்து அரசுக்கு பரிந்துரை செய்தது. அதன்படி, கர்ப்பிணி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும் தண்டனை காலம் முடியும் முன்பே குஜராத் அரசின் சிறப்பு அதிகாரத்தின் அடிப்படையில் திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில், கோத்ரா சிறையில் இருந்து வெளிவரும் அவர்களை அவர்களது உறவினர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். இனிப்பு வழங்குவதுடன் அவர்களில் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார் ஓர் இளைஞர். இந்தக் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
டாபிக்ஸ்