'உச்ச நீதிமன்றம் அதன் வரம்பை மீறுகிறது': வக்பு குறித்த கருத்துகளுக்கு பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே கண்டனம்
ஆளுநர்கள் குறிப்பிடும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் செயல்படுவதற்கான காலக்கெடுவை உச்சநீதிமன்றம் எவ்வாறு நிர்ணயிக்க முடியும் என்றும் பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே கேள்வி எழுப்பினார்

வக்பு திருத்தச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய கருத்துக்களை விமர்சித்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே, உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால் நாடாளுமன்றத்தை மூட வேண்டும் என்று சனிக்கிழமை விமர்சித்துள்ளார். பாஜக தலைவர் ஜே.பி.நட்டா பின்னர் இந்த கருத்துக்களும் கட்சிக்கு சம்பந்தமில்லை என தெரிவித்தார், அவை "தனிப்பட்ட அறிக்கைகள்" என்று நட்டா கூறினார்.
உச்ச நீதிமன்றத்தை கடுமையாக தாக்கிய நிஷிகாந்த் துபே, ஆளுநர்கள் பரிந்துரைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் செயல்பட உச்ச நீதிமன்றம் எவ்வாறு காலக்கெடுவை நிர்ணயிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். நான்கு முறை எம்.பி.யாக இருந்த துபே, "நாட்டில் மோதலை தூண்டுவதற்கு நீதிமன்றம் பொறுப்பாகிறது" என்றும், "அதன் வரம்புகளை மீறிச் செல்கிறது" என்றும் கூறினார்.
மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும் செயல்பட காலக்கெடு விதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கேள்வி எழுப்பியதை அடுத்து துபேவின் கருத்துக்கள் வந்துள்ளன.
துபே வெளியிட்ட பதிவு
'எக்ஸ்' தளத்தில் இதுகுறித்து இந்தியில் ஒரு பதிவில், துபே, "உச்ச நீதிமன்றம் சட்டங்களை இயற்றினால், நாடாளுமன்ற கட்டிடத்தை மூட வேண்டி இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ.யிடம் பேசிய அவர், சட்டங்களை இயற்றுவதற்கான நாடாளுமன்றத்தின் ஆணைக்கு உச்ச நீதிமன்றம் சிறிதும் மரியாதை காட்டவில்லை என்றார்.
முன்னதாக, வக்பு தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முஸ்லிம்கள் இந்து மத அறக்கட்டளைகளில் அங்கம் வகிக்க அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் கண்டனம்
உச்ச நீதிமன்றம் குறித்து துபே தெரிவித்த கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ஜெய்ராம் ரமேஷ், உச்சநீதிமன்றத்தை பலவீனப்படுத்த பாஜக முயற்சிக்கிறது என்று கூறினார். “ஒரு சட்டம் இயற்றப்படும் போது, நீங்கள் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்புக்கு எதிராக செல்லக்கூடாது, சட்டம் அரசியலமைப்பிற்கு எதிராக இருந்தால், அதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று உச்சநீதிமன்றம் சொல்வதால், அமைச்சர்கள், பாஜக எம்.பி.க்கள் உச்சநீதிமன்றத்திற்கு எதிராக பேசுகிறார்கள். தேர்தல் பத்திரங்கள் போன்ற பல பிரச்சினைகளில், அரசாங்கத்தால் செய்யப்பட்டவை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதால், வேண்டுமென்றே உச்ச நீதிமன்றம் குறிவைக்கப்படுகிறது, "என்று அவர் ஊடகங்களிடம் உரையாற்றினார்.
திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சாகேத் கோகலே 'எக்ஸ்' வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “இது வக்பு திருத்தம் குறித்த விசாரணைகளை எடுக்க வேண்டாம் என்று இந்திய உச்சநீதிமன்றத்திற்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா விடுத்த நேரடி அச்சுறுத்தல் இது. அவர்கள் இப்போது தனிப்பட்ட முறையில் இந்திய தலைமை நீதிபதியை குறிவைத்து அழுத்தம் கொடுக்கிறார்கள்” என்றார்.
பாஜக தலைவர் தினேஷ் சர்மாவும் சனிக்கிழமை கூறுகையில், குடியரசுத் தலைவரை யாரும் "சவால் விட" முடியாது, ஏனெனில் ஜனாதிபதி "உயர்ந்தவர்" என்று கூறினார்.
