இந்தியாவிலே 99ல் அசாம் ரயில் மோதலுக்கு பின்னர் கோரமானது பாலசோர் ரயில் விபத்து
இதுவரை இந்தியாவில் நடந்த ரயில் விபத்துக்களில் மிகவுக் கோரமானதாக பாலசோர் ரயில் விபத்து பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்துகள்:
ட்ரெண்டிங் செய்திகள்
ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹநாகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு 6:45 மணியளவில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 10 முதல் 12 பெட்டிகள் தடம்புரண்டு பக்கத்து தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் அந்த தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர் ரயில் பெட்டிகள் மீது மோதியதால் அந்த ரயிலும் தடம்புரண்டது.
இந்நிலையில் தற்போது வரை ரயில் விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 288ஆக அதிகரித்துள்ளதாக ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜேனா தெரிவித்துள்ளார். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 18க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தியாவில் இதற்கு முன்னர் நடந்த ரயில் விபத்துக்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம். கடந்த 13 ஆண்டுகளில் கோர விபத்தாக இந்த ரயில் விபத்து பார்க்கப்படுகிறது.
2011ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி, உத்தரப்பிரதேசத்தில் எட்டா மாவட்டம் அருகே சாப்ரா-மதுரா எக்ஸ்பிரஸ் பேருந்து மீது மோதியது. இதில் 69 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து அதிகாலை 1.55 மணியளவில் ஆளில்லா ரயில் கிராசிங்கில் நடந்தது. ரயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்த காரணத்தால் பஸ் சுமார் அரை கிலோமீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டது.
இந்திய ரயில்வே வரலாற்றில் 2012ம் ஆண்டு மிக மோசமான ரயில் விபத்துக்கள் நடந்தன. அந்த ஆண்டில் சுமார் 14 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இதில் தடம் புரண்டது மற்றும் நேருக்கு நேர் மோதியது ஆகிய அடங்கும்.
2012ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி, டெல்லி-சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லூர் அருகே தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
2014ம் ஆண்டு மே 26ம் தேதி உத்தரப்பிரதேசத்தின் சந்த் கபீர் நகர் பகுதியில், கோரக்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த கோரக்தாம் எக்ஸ்பிரஸ், கலிலாபாத் நிலையத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதியது. இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2015ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி டேராடூனில் இருந்து வாரணாசிக்கு சென்று கொண்டிருந்த ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துகுள்ளானது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலியில் உள்ள பச்ரவான் ரயில் நிலையம் அருகே ரயிலின் இன்ஜின் மற்றும் இரண்டு அடுத்தடுத்த பெட்டிகள் தடம் புரண்டதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 150 பேர் காயமடைந்தனர்.
2016ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் 19321 கான்பூரில் புக்ராயன் அருகே தடம் புரண்டதில் குறைந்தது 150 பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2017ம் ஆண்டு ஆகஸ்ட் 19ம் தேதி, ஹரித்வார் மற்றும் பூரி இடையே ஓடும் கலிங்கா உட்கல் எக்ஸ்பிரஸ் உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள கட்டௌலி அருகே விபத்துக்குள்ளானது. ரயிலின் 14 பெட்டிகள் தடம் புரண்டதில் 21 பயணிகள் உயிரிழந்தனர், 97 பேர் காயமடைந்தனர்.
2017ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் அவுரியா அருகே டெல்லி செல்லும் கைஃபியத் எக்ஸ்பிரஸின் ஒன்பது ரயில் பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது 70 பேர் காயமடைந்தனர்.
2011ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி மேற்கு வங்காளத்தின் அலிபுர்துவாரில் பிகானேர்-குவஹாத்தி எக்ஸ்பிரஸின் குறைந்தது 12 பெட்டிகள் தடம் புரண்டதில் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 36 பேர் காயமடைந்தனர்.
1999க்குப் பின்னர் இந்தியளவில் மிக மோசமான ரயில் விபத்தாக ஒடிசா பாலசோர் ரயில் விபத்து பதிவாகியுள்ளது. தற்போது வரை 288 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1999ல் அசாமின் கைசால் பகுதியில் 2,500 பேர் பயணம் செய்த 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 285க்கும் மேற்பட்ட பயணிகள் பலியானார்கள். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
டாபிக்ஸ்