Satyendar Jain Hospitalized: திகார் சிறை பாத் ரூமில் வழுக்கி விழுந்த சத்யேந்திர ஜெயின்-தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
Satyendar Jain: தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் சிறை பாத் ரூமில் மயக்கமடைந்து கீழே வழுக்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சுவாசக் கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஊழல் வழக்கில் திகார் சிறையில் இருந்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மூன்னாள் அமைச்சருமானவர் தான் சத்யேந்திர ஜெயின்.
சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வந்தார். இந்நிலையில், இன்று அவர் திகார் சிறை பாத் ரூமில் வழுக்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் அவர் காயமடைந்தார். அதைத் தொடர்ந்து தீன தயாள் உபாத்யாய் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் லோக் நாயக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இத்தகவலை திகார் சிறைத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறுகையில், "அவர் இன்று காலை 6 மணிக்கு பாத் ரூமில் வழக்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கிருந்து லோக் நாயக் மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் அறிவுறுத்தினர். தற்போது அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்" என்று தெரிவித்தனர்.
முன்னதாக, சத்யேந்திர ஜெயின் சிறையில் மசாஜ் செய்து கொள்ளும் விடியோ வெளியாகி பரபரப்பானது. பின்னர் விருந்து சாப்பாடு போல் ஃபுல் மீல்ஸ் சாப்பிடும் விடியோ வைரலாகியது.
சிறையில் இருந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் 8 கிலோ வரை எடை கூடியுள்ளதாக சிறை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயினை பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறை கடந்த ஆண்டு மே 30 ம் தேதி கைது செய்தது.
கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்தின் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது. இதில், 4.81 கோடி ரூபாய் அளவுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், சத்யேந்திர ஜெயின் குடும்பத்தினருக்கும், அவரது நிறுவனங்களும் இதன் மூலம் பயன் பெற்றதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
இந்தத் தொகைகளைக் கொண்டு டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள விவசாய நிலங்களை நேரிடையாக வாங்குவதற்கும், நிலங்கள் வாங்குவதற்காக வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியிருக்கிறது.

டாபிக்ஸ்