Congress President Poll: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் 96 சதவீத வாக்குகள் பதிவு
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கான தேர்தல் 22 ஆண்டுகளுக்கு பின் நடந்து முடிந்துள்ளது.
புதுதில்லி: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் தேர்தல் இன்று அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில், 96 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ட்ரெண்டிங் செய்திகள்
கடந்த 2019 மக்களவைத் தேர்தல் படுதோல்விக்கு பொறுப்பேற்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகினார். இதையடுத்து அக்கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா தொடர்ந்து வந்த நிலையில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் ராகுல் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், அதனை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, திருவனந்தபுரம் எம்.பி சசிதரூர் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருமுனைப் போட்டி உறுதியாகி இருந்தது.
இந்நிலையில் இன்று (அக்.17) அகில இந்திய காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. புதுதில்லி உள்பட நாடு முழுவதிலும் 65 வாக்குப்பதிவு மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 137 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் வரலாற்றில் தேசியத் தலைவர் பதவிக்கு நடக்கும் 6-வது தேர்தல் இது. இதற்கு முன்பு கடந்த 2000ஆம் ஆண்டு தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில், சோனியாவை எதிர்த்து ஜிதேந்திர பிரசாதா போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதன் மூலம் 22 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு தற்போது நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொதுச் செயலாளர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள், காங்கிரஸ் கமிட்டி தலைவர்களாக உள்ள 9,500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 96 சதவீதம் பேர் தங்கள் வாக்கினை பதிவு செய்துள்ளதாக காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு தலைவர் மதுசூதன் மிஸ்ட்ரி தெரிவித்துள்ளார்.
தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பிறகு தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தேர்தல் குழு தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி, "9,500 பிரதிநிதிகள் வாக்களித்துள்ளனர். 96% வாக்குகள் பதிவாகி உள்ளன. அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை" என குறிப்பிட்டார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கானதேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுதினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
டாபிக்ஸ்