மஞ்சள் பரங்கிக்காய் பராத்தா! ஒரு வயது குழந்தை முதல் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!
பரங்கிக்காய் பராத்தா செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
மஞ்சள் பரங்கிக்காய் – கால் கிலோ
(சுத்தம் செய்து, தோல் எடுத்து, சிறிய துண்டுகளாக நறுக்கி இதை குக்கரில் வைத்து இரண்டு விசில் விட்டு வேகவைத்துக்கொள்ளவேண்டும் அல்லது இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவிட்டுக்கொள்ளவேண்டும். இதை மிக்ஸிஜாரில் அல்லது மேஷர் வைத்து கட்டியில்லாமல் நன்றாக அரைத்துவைத்துக்கொள்ளவேண்டும். ஆறியபின்தான் இதைச் செய்யவேண்டும்)
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்
சீரகத் தூள் – அரை ஸ்பூன்
கரம் மசாலா – அரை ஸ்பூன்
ஓமம் – கால் ஸ்பூன் (நன்றாக கைகளிலே நுணுக்கி பயன்படுத்திக்கொள்ளவேண்டும்)
கோதுமை மாவு – 4 கப்
செய்முறை
மசித்த பரங்கிக்காயில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலா, கைகளில் பொடித்த ஓமம் இவற்றை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும். அடுத்து போதுமை மாவு சேர்த்து தண்ணீர் கலக்காமல் பிசைந்துகொள்ளவேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து சாப்பாத்தி மாவு பதத்துக்கு மாவை பிசைந்துகொள்ளவேண்டும்.
இதை சப்பாத்திகளாகி தேய்த்து தோசைக்கல்லில் போட்டு எடுத்துக்கொள்ளவேண்டும். சூப்பர் சுவையான மஞ்சள் பரங்கிக்காய் பராத்தா தயார். இதற்கு தொட்டுக்கொள்ள தயிர் கூட போதுமானது அல்லது எந்த ஒரு குருமா, கிரேவி, ரைத்தா, தொக்கு போன்ற அனைத்துமே நன்றாகத்தான் இருக்கும்.
மஞ்சள் பரங்கிக்காய் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. ஆனால் அவர்கள் அதை சாப்பிட அடம்பிடிப்பார்கள். எனவே அவர்களுக்கு இதுபோல் பராத்தாவில் மறைத்து வைத்துக்கொடுத்தால், அவர்களுக்கு பரங்கிக்காயின் நன்மைகளும் கிடைக்கும். அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் மட்டுமின்றி உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்கள் வீட்டில் உள்ள அனைத்து வயது குழந்தைகளுக்கும் இதை அடிக்கடி செய்துகொடுங்கள்.
மேலும் ஒரு ரெசிபியையும் தெரிந்துகொள்ளுங்கள்
ரயில்வே தண்ணீர் சட்னி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை – ஒரு கப்
தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
பூண்டு – 3 பல்
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
உப்பு - தேவையான அளவு
புளி பேஸ்ட் – ஒரு ஸ்பூன்
தண்ணீர் – 2 டம்ளர்
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – ஒரு ஸ்பூன்
வர மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
பொட்டுக்கடலை, தேங்காய், மல்லித்தழை, இஞ்சி, பூண்டு, உப்பு, பச்சை மிளகாய், புளிக்கரைசல், தேவையான அளவு உப்பு என அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
இதை ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி நல்ல தண்ணீராகக் கரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் கடுகு, உளுந்து, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அந்த சட்னியில் சேர்க்கவேண்டும். இதை இட்லியுடன் தாராளமாக பரிமாறி சாப்பிட சுவை அள்ளும்.
நீங்கள் சட்னி பிரியர் என்றால் இந்த சட்னியைக் கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள். ஏனென்றால் உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று கட்டாயம் கேட்பீர்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள் ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்