‘என் ஃப்ரண்டப்போல யாரு மச்சான்?’ ஒரு சிலரின் நட்பு வட்டம் மட்டும் அதிகம் இருக்க காரணம் - உளவியல் ரிப்போர்ட்!
என் ஃப்ரண்டப்போல யாரு மச்சான் என்று நீங்கள் நட்பு பாராட்டும் நபரா? ஒரு சிலரின் நட்பு வட்டம் மட்டும் அதிகம் இருக்க காரணம் என்ன என உளவியல் ரிப்போர்ட் கூறுகிறது.

ஒரு சிலரின் நட்பு வட்டம் மட்டும் அதிகம் இருக்கும். அதற்கு காரணம் என்ன என்று உளவியல் ரீதியாக சில உண்மைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. நட்பு என்பது மனித வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். நண்பர்கள்தான் நம் வாழ்வையே மாற்றுபவர்களாகவும், தீர்மானிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். உங்கள் நண்பன் யார் என்று கூறுங்கள், நீங்கள் யார் என்று நான் கூறுகிறேன் என்ற வாசகமும், நம்மை நம் நட்புகள் எப்படி வடிவமைக்கின்றன என்பதைக் குறிக்கிறது. நண்பர்கள் கூட்டமோ அல்லது ஒரு சில நண்பர்களோ, விழும்போது எழுப்பி விடுகிறார்கள். உறவுகளில் கூட துரோகம் அடிக்கடி நடைபெறும். ஆனால் நட்பில் அது இருக்காது. நட்பில் வரும் பிளவுக்குக் கூட அன்புதான் காரணமாகிறது. சிலருக்கு மட்டும் அதிக நண்பர்கள் இருப்பதற்கு காரணமாக இங்கு உளவியல் சில காரணங்களைக் கூறுகிறது. அவை என்னவென்று பாருங்கள்.
சமூகத்திறன்கள்
நல்ல சமூகத்திறன்கள் கொண்டவர்கள், யாருடனும் எளிதில் பழகிவிடுவார்கள். அவர்கள் எங்கும் முன்னெடுத்துச் செல்வார்கள். இதனால் அவர்களால் நண்பர்களையும் கவர்ந்து இழுக்க முடிகிறது. இது அவர்களின் நட்பு வட்டத்தை மேம்படுத்துகிறது.
தனிப்பட்ட குணங்கள்
நீங்கள் வெளிப்படையாக பழகும் நபர் என்றால், உங்களுக்கு எண்ணற்ற நண்பர்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. அனைவருடனும் சகஜமாகப் பழகும் நபர்களுக்கும் எண்ணற்ற நண்பர்கள் இருக்கிறார்கள். ஏனெனில் மற்றவர்களுடன் அவர்கள் விரைவில் பழகிவிடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு எவ்வித தடையும் இருப்பதில்லை. இது அவர்களுக்கு நல்ல பலத்தைக்கொடுக்கிறது.
