தைப் பிறந்தால் வழி பிறக்கும்’ இந்தப் பொங்கல் நாளில் செய்ய ஏற்ற வித்யாசமான ரெசிபி இதோ!
இந்தப் பொங்கலுக்கு செய்ய மிளகுப் பொங்கல் ரெசிபி இதோ.
தைப்பொங்கல் என்பது தமிழர்களின் அறுவடை திருவிழாவாகும். இது தமிழர்களால் நான்கு நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இது தமிழ் மாதமான தையில் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை சூரியனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இது வட இந்தியாவில் மகர சங்கராந்தியாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் இந்தப் பண்டிகை பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை போகியுடன் துவங்குகிறது. போகியன்று மக்கள் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதன் அடிப்படையில் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிக்கிறார்கள். அடுத்த நாள் தை முதல் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் தேடி விதை என்பதற்கு ஏற்ப, ஆடி மாதம் விதைத்த நெல் தை மாதத்தில் அறுவடைக்கும் வந்துவிடும். அந்த புதுநெல்லைப் போட்டு பொங்கலிடுகிறார்கள். அந்தப் பொங்கலை உழவுத்தொழிலுக்கு துணை நின்ற சூரியனுக்கும், இயற்கைக்கும் படையிலிட்டு வணங்குகிறார்கள். அடுத்த நாள் மாட்டுப்பொங்கல், அன்றைய தினம் உழவுத் தொழிலுக்கு உதவி செய்த கால்நடைகளுக்கு குறிப்பாக மாடுகளை குளிப்பாட்டி, அவற்றை அலங்கரித்து, அவற்றுக்கு பொங்கலிட்டு, ஊட்டி மகிழ்கிறார்கள். அடுத்த நாள் காணும் பொங்கல், இந்த நாளில் மக்கள் பல்வேறு சுற்றுலா தலங்களும் சென்று புதிய இடங்களைக் கண்டு மகிழ்கிறார்கள். இதனால் இந்த நான்கு நாட்களும் உழைத்து, களைத்த தமிழர்கள் கொண்டாடி மகிழ்கிறார். தமிழ்நாட்டின் முக்கிய பண்டிகயான பொங்கல் நான்கு நாட்கள் நிறைவுடனும் மகிழ்வுடனும் இவ்வாறு கொண்டாடப்படுகிறது.
சூரிய பகவான் வடக்கு நோக்கிய தனது பயணத்தை துவக்கும் நாளில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அது உத்ரநாராயணா என்று அழைக்கப்படுகிறது. அன்று மகர ராசியில் சூரியன் நுழைகிறார். பின்னர் பொங்கல் என்று வந்தது. அதற்கு பொங்குதல் மற்றும் வேகவைப்பது என்று பொருள். அன்று பொங்கல் என்ற உணவு சமைக்கப்படுவதால் அப்படி அழைக்கப்படுகிறது. பொங்கல் அன்று சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண் பொங்கல் தயாரிக்கப்படுகிறது. மேலும் அன்று வாசலில் கோலங்கள் போட்டு வர்ணிக்கப்படுகிறது. வீடுகளை சுத்தம் செய்து மாவிலை தோரணங்கள் கட்டி மக்கள் அலங்கரிக்கிறார்கள். பொதுவாக பொங்கல் என்றால் பால் பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் என்ற இரண்டு வகை பொங்கல்தான் வைக்கப்படும். ஆனால் நீங்கள் இந்த ஆண்டு வித்யாசமாக கருப்பட்டியில் பொங்கல் செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 2 கப்
பாசிப்பருப்பு – 2 கப்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
மிளகு – ஒன்றரை ஸ்பூன்
சீரகம் – ஒன்றரை ஸ்பூன்
பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
முந்திரி – கைப்பிடியளவு
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
நெய் – 8 டேபிள் ஸ்பூன்
செய்முறை
இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும். பாசிப்பருப்பை கடாயில் ட்ரையான வறுத்துக்கொள்ளவேண்டும். அதை எடுத்துவிட்டு அரிசியையும் சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும்.
குக்கரில் 6 கப் தண்ணீர் ஊற்றி அதிக தீயில் வைத்து கொதிக்க விடவேண்டும். வறுத்த அரிசி மற்றும் பருப்பை தண்ணீர் ஊற்றி அலசிவிட்டு, குக்கரில் கொதிக்கும் தண்ணீரில் சேர்க்கவேண்டும்.
மற்றொரு கடாயில் பாதி நெய் ஊற்றி, இஞ்சி, முந்திரி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும். அரிசி வெந்தவுடன் அதில் மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளவேண்டும். பின்னர் வதக்கியவற்றையும் சேர்த்து, தேவையான அளவு உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.
மேலும் அதில் சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடிபோட்டு மூடி விசிலை வைக்கவேண்டும். ஒன்று அல்லது இரண்டு விசில் வந்தவுடன், அடுப்பில் இருந்து இறக்கி, சூடு தணிந்தவுடன் விசிலை எடுத்துவிட்டு நன்றாக எஞ்சிய நெய்யை ஊற்றி கிளறி இறக்கினால், சூப்பர் சுவையான மிளகுப் பொங்கல் தயார். இதனுடன் சாம்பார் அல்லது தேங்காய் சட்னி சேர்த்து தொட்டு சாப்பிட சுவை அள்ளும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்