மருந்துகளின்றி ஆரோக்கிய வாழ்வு வாழ வேண்டுமா? இதுதான் சரியான வழி – மருத்துவர் கூறுவது என்ன?
மருந்துகளின்றி ஆரோக்கிய வாழ்வு வாழும் வழிகளாக திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் கூறுவது என்ன?

ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமா? ஆடம்பரமான வாழ்க்கை வேண்டுமா? என்றால், ஆரோக்கியமான வாழ்க்கை மட்டுமே போதும், மேலும் தேவைக்கு ஏற்ப இருந்தால் போதும் என்ற மனநிலைக்கு மாற மக்கள் ஆரம்பித்துவிட்டனர். இன்றைய தலைமுறையினர் இரவு, பகல் பாராமல் உழைத்து பொன், பொருள் சேர்க்கிறார்களோ இல்லையோ, நோயை இளம் வயதிலேயே சேர்த்து வளர்த்து வாழ்ந்து வாழ்கின்றனர். 100 ஆண்டுகளுக்கு முன்னர் உணவுதான் மருந்தாக இருந்தது. ஆனால் இன்று மருந்துதான் உணவாக இருக்கிறது.
நம்மை நோய்கள் ஆளக்காரணம்
நம்முடைய தற்போதைய உணவு முறை மாற்றங்கள், தற்போதைய வாழ்க்கை முறை மாற்றங்கள் தான் தற்போதைய நோய்களுக்கு முழுக்காரணம் என்பதை இளைய தலைமுறையினர் கண்டிப்பாக உணரவேண்டும். இரவு 9 மணிக்கே உறங்கி காலையில் 6 மணிக்கு எழுச்திருக்கம் பழக்கம் மாறி, இரவு 12 மணியைக்கடந்தும் விழித்துக்கொண்டு, காலையில் 10 மணியைக் கடந்தும் உறங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
ஓடி, ஆடி, குனிந்து, நிமிர்ந்து, நடந்து, ஏறி, இறங்கி என வேலை செய்வது மாறி, இன்று நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டு வேலை செய்வது, இயந்திரங்கள் மீதி வேலையை செய்வதும், இருசக்கர மிதிவண்டி ஓட்டுதல் பழக்கம் மாறி, இருசக்கர எரிபொருள் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்ததும், உழைக்கும் நேரத்தில் உறங்குவதும், உறங்கும் நேரத்தில் உழைப்பதும், இயற்கை உந்தல்களான மலம், சிறுநீர், பசி, தூக்கம், வாயு, மூச்சு, கொட்டாவி, இருமல், தும்மல், பசி, தாகம், வாந்தி, கண்ணீர், விந்து உள்ளிட்டவைகளை அடக்குவதும், தினசரி உறக்கம் குறைவதும், தீராத மனக்கவலையும், தீராத மன அழுத்தமும், மன உளைச்சலும் மற்றும் பணக்கஷ்டமும், உணவுப் பொருட்கள், தின்பண்டங்களின் தரமின்மை, ரசாயன கலப்படங்களும், சுகாதாரமற்ற குடிதண்ணீரும் சுகாதாரமற்ற காற்றும், தரமற்ற மருந்துகளும் மருந்துகளில் கலப்படமும், தரமற்ற, தவறான சிகிச்சை முறைகள், தவறானவர்களால் அளிக்கப்படுவதும், துரித உணவுகளை அதிகமாக அடிக்கடி தொடர்ந்து சாப்பிட்டு வருவதும், தொடர் போதைப் பொருட்கள் பயன்பாடும், புகை மற்றும் மதுப் பழக்கம் அனைவரிடத்திலும் வேகமாக பரவி வருவதும், உடை கலாச்சார மாற்றங்களும், பல்வேறு வடிவ வண்ண காலணிகள் பயன்பாடுகளும், தரமற்ற அழகு சாதன பொருட்கள் பயன்பாடும், அதி தீவிர தொடர் பயன்பாடுகளும், தற்கால கைபேசி முதல் கம்ப்யூட்டர் பயன்பாடுகள் தீவிரமாக அனைவரும் தொடர்ந்து பயன்படுத்துவதும், தவறான உணவு உண்ணும் நேர மாற்றங்களும், உறங்கும் நேர மாற்றங்களும், அறுசுவை உணவு உண்ணாமல் ஒரே மாதிரியான உணவுகளையே தொடர்ந்து உண்பதும், மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கையும் என பல்வேறு காரணங்களால், ஆரோக்கியம் அனைவரிடத்திலும் குறைந்து வருகிறது.