Vathal Kulambu : மூன்று மாதம் வரை சேமிக்கும் வகையில் வத்தக்குழம்பு! பொடி ரெசிபியும் உள்ளது!
Vathal Kulambu : மூன்று மாதம் வரை சேமிக்கும் வகையில் வத்தக்குழம்பு செய்யமுடியும். அதற்கான பொடி ரெசிபியும் உள்ளது. அதையும் தனியாக செய்துவைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.

வத்தக்குழம்பு பொடி செய்ய தேவையான பொருட்கள்
வரமல்லி – 3 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
மிளகு – 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
உளுந்து – ஒரு ஸ்பூன்
வர மிளகாய் – 10
பெருங்காயம் – ஒரு உருண்டை
கறிவேப்பிலை ஒரு கொத்து
கடுகு – ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை
கடாயை அடுப்பில் வைத்து சூடானவுடன், வரமல்லி, துவரம் பருப்பு, மிளகு, வெந்தயம், உளுந்து, வரமிளகாய், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை என அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வறுக்கவேண்டும்.
கவனமான தீய்ந்து விடாமல் குறைவானது முதல் மிதமானது வரையிலான தீயில் வறுக்கவேண்டும்.
பின்னர் கடுகு, சீரகம் சேர்த்து கடுகு வெடித்தவுடன் அடுப்பை அனைத்து விடவேண்டும். கவனம் இவையிரண்டையும் இறுதியாகத்தான் சேர்க்க வேண்டும். ஆரம்பத்திலே சேர்ததால், அதிகம் வறுபட்டு, குழம்புக்கு கசப்பு சுவையைத்தரும்.
அனைத்தையும் தனியா ஒரு பாத்திரத்தில் கொட்டி, ஆறவைத்து, காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடி செய்துகொள்ள வேண்டும்.
இந்தப்பொடியை நீங்கள் சேமித்து வைத்துக்கொள்ள செய்கிறீர்கள் என்றால் கடையில் ஒரு ஸ்பூன் கல் உப்பு மற்றும் மஞ்சள் தூளை இறுதியாக சேர்த்து பொடி செய்துகொள்ள வேண்டும்.
வத்தக்குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 200 மிலி
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
சுண்டக்காய் வத்தல் – ஒரு கப்
மணத்தக்காளி வத்தல் – ஒரு கப்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பூண்டு – 50 கிராம் (பொடியாக நறுக்கியது)
கல் உப்பு – தேவையான அளவு
தக்காளி – கால் கிலோ
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
புளி – 50 கிராம்
தேங்காய் – அரை மூடி (துருவியது அல்லது பற்களாக நறுக்கியது)
சோம்பு – ஒரு ஸ்பூன்
செய்முறை
ஒரு மண் கடாயில் எண்ணெய் சேர்க்கவேண்டும். கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில், சுண்டைக்காய் வத்தல் மற்றும் மணத்தக்காளி வத்தல் ஆகிய அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். தக்காளி சேர்த்து நன்றாக சுருள வதக்கவேண்டும். தேவையான அளவு கல்உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
பின்னர் புளிக்கரைசலை சேர்த்து, தேங்காய் மற்றும் சோம்பு அரைத்து ஒன்றாக சேர்த்து கலந்துகொள்ள வேண்டும். அரைத்த வத்தல் குழம்பு பொடியையும் சேர்க்கவேண்டும்.
மூடிபோட்டு குறைவான தீயில் தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து எண்ணெய் பிரிந்துவரும் வரை கொதிக்க வைக்கவேண்டும்.
இடையிடையே மூடியை திறந்து கிளறிவிட்டுக்கொள்ளவேண்டும். எண்ணெய் பிரிந்து வந்தவுடன், இதை ஒரு காய்ந்த பாட்டிலில், காற்றுப்புகாமல் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தேவைப்படும்போது, சூடான சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிடவேண்டும்.
சுவையில் உச்சுகொட்ட வைக்கும். இதை 3 மாதம் வரை வைத்துக்கொள்ளலாம். பொடியையும் 3 மாதம் வரை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி இதை சாப்பிடுவார்கள்.
சுவையான வத்தல் குழம்பு பொடி மற்றும் வத்தக்குழம்பு ரெசிபி செய்வதை கற்றுக்கொண்டு அடிக்கடி செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

டாபிக்ஸ்