உளுந்து புட்டு : உளுந்தில் கூட புட்டு செய்ய முடியுமா? ஒருமுறை ருசித்தால் மீண்டும் சுவைக்கத்தூண்டும் புட்டு ரெசிபி!
உளுந்து புட்டு : உளுந்தில் கூட புட்டு செய்ய முடியும். இதன் சுவையை நீங்கள் ஒருமுறை மட்டும் ருசித்துவிட்டால், மீண்டும், மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். குறிப்பாக பெண்களுக்கு உளுந்தம் புட்டு ஏன் அவசியம் என்று பாருங்கள்.

உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு கட்டாயம் செய்துகொடுக்க வேண்டிய உணவுகளுள் முக்கியமானது உளுந்து புட்டு, பூப்பெய்திய பெண்களின் இடுப்பு எலும்புகள் வலுப்பெற வேண்டுமெனில், அவர்களுக்கு நம் முன்னோர்கள் உளுந்தில் செய்யப்பட்ட உணவுகளைக் கொடுப்பார்கள். ஆனால் உளுந்தங்களி மற்றும் கஞ்சி ஆகியவற்றை மட்டும் செய்துகொடுக்கும்போது, சாப்பிடுபவர்களுக்கு அது போர் அடிக்கும் என்பதால், உளுந்தில் புட்டு ரெசிபியை செய்துகொடுங்கள். இது அவர்களுக்கு சத்து மட்டுமின்றி, ருசியாகவும் இருக்கும். இதை எப்படி செய்வது என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
• உளுந்து – ஒரு கப்
• அரிசி – அரை கப்
• வெல்லம் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
• தேங்காய்த் துருவல் – ஒரு கப்
• ஏலக்காய் – 2
• உப்பு – தேவையான அளவு
செய்முறை
1. ஒரு கடாயில் உளுந்து சேர்த்து நல்ல பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். இதை ட்ரை ரோஸ்ட் தான் செய்யவேண்டும். எண்ணெய் எதுவும் சேர்க்கக்கூடாது. வறுத்ததை ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவேண்டும்.
2. அடுத்து அரிசியையும் எடுத்து பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். பொரி அரிசி பதம் வரவேண்டும். இதையும் ஒரு தட்டில் பரப்பி ஆறவைத்துவிடவேண்டும். இரண்டையும் வறுக்கும்போது, அடுப்பை சிம்மில் வைத்து மிதமான தீயில் வறுத்துக்கொள்ளவேண்டும். இரண்டுக்குமே எண்ணெய் சேர்க்கக்கூடாது.
மேலும் வாசிக்க - கட்டிப்பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
3. அடுத்து ஆறிய அரிசி மற்றும் உளுந்து இரண்டையும் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
4. பொடித்த மாவில் உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். புட்டு பதத்துக்கு இதை தயார் செய்துகொள்ளவேண்டும். இந்த மாவு சிறிது கட்டி தட்டினால், மிக்ஸி ஜாரில் சேர்த்து பல்ஸ் மோடில் பொடித்துக்கொள்ளவேண்டும்.
5. அடுத்து பொபொலவென்ற மாவில் சிறிது தேங்காய் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவேண்டும். 15 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைக்கவேண்டும்.
6. இதை நன்றாக உடைத்துவிட்டு, ஏலக்காய்த் தூள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறிவிடவேண்டும். பொடித்த வெல்லம் சேர்த்து கலந்துகொள்ளவேண்டும். வெல்லத்துக்கு பதில் நாட்டுச்சர்க்கரை அல்லது பிரவுன் சுகரும் சேர்த்துக்கொள்ளலாம்.
7. இதில் நெய் ஊற்றி கிளறலாம் அல்லது நெய்யில் முந்திரியை வறுத்தும் சேர்த்துக்கொள்ளலாம். இதை தேவைப்பட்டால் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம்.
இந்தப்புட்டை உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். மாவை தயாரித்து ஸ்டோர் செய்துவைத்துக்கொண்டு நினைத்த நேரத்தில் தயாரிக்கலாம். பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்தும் பருவத்தில் இதை செய்துகொடுக்கும்போது, அவர்களின் எலும்பு ஆரோக்கியம் அதிகரிக்கும். ஒருமுறை செய்து, சாப்பிட்டு மகிழுங்கள்.

டாபிக்ஸ்