காசநோய் : தமிழக காசநோய் விவரம்; அச்சுறுத்தும் புள்ளி விவரங்கள்; என்ன செய்யலாம்? – மருத்துவர் அறிவுரை!
காசநோய் : இப்போது ஏஐயை பயன்படுத்தி, ஆரம்ப கட்டத்திலே காசநோயை எளிதில் கண்டறிய முடியும். அவ்வாறு கண்டறிந்து சிகிச்சை கொடுக்கும்போது, அது அவர்களுக்கு சிகிச்சை வெற்றி சதவீதம் 85 சதவீதத்தை கடக்க முடியும்’ என்று கூறுகிறார்.

தமிழகத்தின் அண்மை புள்ளி விவரப்படி காசநோய் குறைந்துள்ளதைப்போல் தெரிந்தாலும், உண்மையில் குறைந்துள்ளதா என்பதை தெளிவாகக் கண்டறிய வேண்டும் என்று மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்த அவரது விவரங்கள்
தமிழகத்தில் 2023ம் ஆண்டு 23 லட்சம் பேருக்கு காசநோய் பரிசோதனை செய்யப்பட்டு, அதில் 95,296 பேருக்கு கண்டுபிடிக்கப்பட்டது. 2024ம் ஆண்டு 32 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதில் 93,301 காசநோயாளிகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 1995 பேர் குறைவாக காட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2015ம் ஆண்டில் ஒரு லட்சம் பேரில் 1253 பேருக்கு பரிசோத்தித்துள்ளனர். ஆனால் 2024ல் அது 4,198 பேருக்கு பரிசோதித்துள்ளனர். எனவே பரிசோதனைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டும், காசநோய் பாதிப்பு குறைவாக உள்ளது. 2015ம் ஆண்டு மற்றொரு புள்ளிவிவரம் கூறுகையில் ஒரு லட்சம் பேருக்கு 192 பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. 2022ம் ஆண்டு அது 179 பேராக அது குறைந்துள்ளது. 2024ல் அது 170 ஆக உள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் காசநோய் ஒழிப்புத்திட்டம் நல்ல முறையில் செயல்படுவதாக எண்ணிக்கொள்கிறோம்.
ஆனால் நிபுணர் என்ன கூறுகிறார்கள் என்பதை நாம் பார்க்கவேண்டும். டாக்டர் சவும்யா சுவாமிநாதன் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அவர் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக்த்தில் காசநோய் குறித்து அதிக ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
அறிகுறியே தெரியாது
அவர் கூறுகையில், ‘தமிழகத்தில் காசநோயாளிகள் குறைவான அளவு கண்டறியப்பட்டதற்கு காரணமாக அறிகுறிகள் இல்லாமல் காசநோய் இருக்கலாம். தமிழகத்தில் நடந்த பரிசோதனையில் 39 சதவீத காசநோயாளிகளுக்கு அறிகுறிகள் இருப்பதில்லை என்பதை கண்டுபிடித்துள்ளார்கள். அறிகுறிகள் இல்லாதபோது காசநோயைக் கண்டறிய, எக்ஸ்ரே மட்டுமே உதவும் என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது ஏஐயை பயன்படுத்தி, ஆரம்ப கட்டத்திலே காசநோயை எளிதில் கண்டறிய முடியும். அவ்வாறு கண்டறிந்து சிகிச்சை கொடுக்கும்போது, அது அவர்களுக்கு சிகிச்சை வெற்றி சதவீதம் 85 சதவீதத்தை கடக்க முடியும்’ என்று கூறுகிறார்.
சர்க்கரை நோயும், காசநோயும்
சர்க்கரை நோயும், காசநோயும் இணை பிரியாத தோழர்கள் எனலாம். தமிழகத்தில் சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகம் உள்ளது. சர்க்கரை நோய் இருந்தால், காசநோய் பாதிப்பு மீண்டும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நகரத்தில் கிட்டத்தட்ட 20 சதவீதம் மக்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கிராமப்புறத்தில் 15 சதவீதத்திற்கு அருகில் உள்ளது. வந்த பின்னர் கண்டுபிடிப்பதைவிட, அறிகுறிகள் இல்லாமல் இருக்கும் நபர்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடித்து முறையான சிகிச்சையளித்தால் மட்டுமே நாம் உண்மையான காசநோய் பாதிப்பு விவரங்கள் தெரியவந்து, அவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியும்.
சென்னை மக்களில் 74 சதவீதம் பேருக்கு காசநோய் கிருமி உடலில் இருக்கும். ஆனால் நோயைக் கொடுக்காது. ஆனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, அவர்களுக்கு தொற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இது லேட்ண்ட் காசநோய் என்று பொருள். அந்த வகையில், தமிழகத்தில் சர்க்கரை நோயின் பாதிப்பு இருக்கையில் நாம் இதை கவனத்தில்கொள்ளவேண்டும்.
முற்றிலும் ஒழிக்க அரசு என்ன செய்யவேண்டும்?
காசநோய் வாய்ப்பு அதிகம் உள்ள நபர்கள், குடும்பத்தில் உள்ள நபருக்கு இருந்தால், உடன் இருப்பவர்களுக்கு பரிசோதனை செய்வது கட்டாயம். சர்க்கரை நோயாளிகளுக்கு, காசநோய் அறிகுறிகள் இருந்தால், அவர்களையும் பரிசோதிக்க வேண்டும். 2025ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது. அதை செயல்படுத்த நாம் இப்படி நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம்.
உடல் எடை குறைந்தவர்கள், உடலில் ஹெச்ஐவி தொற்றுநோய் பாதிப்பு உள்ளிட்டவற்றால் நோய் எதிர்ப்பு குறைந்தவர்கள், சர்க்கரை நோயாளிகள், காசநோயாளிகளுடன் அதிகம் தொடர்பில் இருப்பவர்களை கண்டுபிடித்து பரிசோதிப்பதும் அவசியம்.
இவ்வாறு மருத்துவர் புகழேந்தி தெரிவித்தார்.

டாபிக்ஸ்