Tuberculosis : தமிழகத்தில் காசநோயின் நிலை என்ன தெரியுமா? – ஆய்வு தரும் அதிர்ச்சி தகவல் என்ன?
Tuberculosis : தமிழகத்தில் காசநோயின் நிலை என்ன தெரியுமா? – ஆய்வு தரும் அதிர்ச்சி தகவல் என்ன?

காசநோய் என்றால் என்ன?
காசநோய் அல்லது டிபி என்பது, நுரையீரலை தாக்கும் நோய் ஆகும். ஒரு வகை பாக்டீரியாக்கள் காசநோயை உண்டாக்குகின்றன.
பாதிக்கப்பட்ட நபர் இருமும்போதும், தும்மும்போதும் காசநோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. பாதிக்கப்பட்ட நபர் இருமும்போதும், தும்மும்போது கண்ணுக்கு தெரியாத நுண் கிருமிகள் காற்றில் பரவுகின்றன. அதை மற்றொரு நபர் சுவாசிக்கும்போது அவரது நுரையீரலை அந்த கிருமிகள் சென்றடைகிறது.
கூட்டத்தில் காசநோய் எளிதாக பரவிவிடும். கூட்டமாக மக்கள் வசிக்கும் இடத்திலும் காசநோய் எளிதில் பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், ஹெச்வி வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நோய் விரைவில் தொற்றும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதற்கு ஆன்டிபயோடிக் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால் சில பாக்டீரியாக்கள் சிகிச்சைக்கு கட்டுப்படாது.
காசநோயின் பொதுவான அறிகுறிகள்
இருமல்
இருமும்போது சளி அல்லது ரத்தம் வருவது
நெஞ்சு வலி
மூச்சுவிடும்போதும், இருமும்போதும் வலி இருக்கவேண்டும்
குளிர்
காய்ச்சல்
இரவு நேரத்தில் வியர்வை
உடல் எடை குறைவு
சாப்பிட பிடிக்காமை
சோர்வு
பொதுவாகவே நலமுடன் இல்லாத நிலை
தமிழகத்தில் காசநோயின் நிலை
தமிழகத்தில் கடந்த ஆண்டு 70,000 காசநோயாளிகள் கண்டறியப்பட்டதாக தரவுகளாக உள்ளது. (சென்னையில் 70 சதவீதம் மக்கள் காசநோய் வாய்ப்பிற்கு (Latent Tuberculosis) ஆளாகியுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலும் ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது)
பல்வேறு காரணங்களுக்காக, காசநோய் அறிகுறிகளுடன் உள்ள 64 சதவீதம் நோயாளிகள் சிகிச்சையை நாடவில்லை என தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் ஆய்வின் தகவலை பகிர்ந்துள்ளார்.
காசநோய் தடுப்பு குறித்தான பகுதிவாரியான கூட்ட நிகழ்வில், தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில், 68 சதவீதம் மக்கள் காசநோய் அறிகுறிகளை கண்டுகொள்வதில்லை என்றும்,18 சதவீதம் மக்களுக்கு காசநோய் அறிகுறிகள் குறித்து எதுவும் தெரியவில்லை என்றும், 12 சதவீதம் மக்கள் சுயமாக தவறான மருந்துகளை உட்கொள்வதாகவும், 2 சதவீதம் மக்கள் சிகிச்சையைக் கூட நாடவில்லை அல்லது அதற்கான பொருளாதார மற்றும் பிற சூழல் இல்லை என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
காசநோய் தடுப்புத் திட்டத்தின் நோக்கம், ஆரம்ப கட்டத்திலேயே பாதிக்கப்பட்டவர்களை தேவையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தி, தொடக்கத்திலேயே நோயை கண்டறிந்து, சரியான சிகிச்சை அளிப்பது என்பதேயாகும்.
ஆரம்பத்திலேயே காசநோய் கண்டறியப்படாமல்போனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு, நோய் பாதிப்பு அதிகமாகி, நுரையீரல் மோசமாக பாதிக்கப்படுவது ஆய்வுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மருந்து-மாத்திரைகள் தட்டுப்பாடு
மருத்துவர்கள் காசநோயாளிகள், தேவையான சிகிச்சை உரிய காலத்திற்கு எடுத்துக்கொள்வதில்லை என்றும், நோய் முற்றிலும் குணமாகாமல் ஓரளவு சரியான சூழலில், நோயாளிகள் மருந்து உட்கொள்வதை நிறுத்திவிடுவதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும் அது உண்மையல்ல.
சமீபத்தில் காசநோய் மருந்துகள் பற்றாக்குறை காரணமாக, பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தொடர்ந்து மருந்து அல்லது மாத்திரை என்பது தமிழகத்திலும்/இந்தியாவிலும் கிடைக்கவில்லை என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும் சரியான சத்துணவு காசநோயாளிகளுக்கு முன் அளிக்கப்பட்டதுபோல் (மாமிச அல்லது புரத உணவு) தற்போது அளிக்கப்படவில்லை.
நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான சத்தான உணவின்றி காசநோய் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும்போது ஈரல் பாதிப்பு, நரம்புத் தளர்ச்சி, வைட்டமின் குறைப்பாடு, செரிமானக் கோளாறுகள் ஏற்பட்டு, மருந்து மாத்திரை பின்விளைவுகளால் மாத்திரைகளை நிறுத்தும் கட்டாயத்திற்கு நோயாளிகள் தள்ளப்படுகின்றனர்.
சுருக்கமாக, தரமான சிகிச்சை, சத்துணவோடு இலவசமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழுமையாக கிடைக்கும்போது, அது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் பங்களிப்புடன் அரசு செயல்படுத்தினால், மக்கள் தொடர் சிகிச்சையை நிச்சயமாக மேற்கொள்வர் என்பது உறுதி.
எனவே, அரசு அல்லது சுகாதாரத்துறை மக்கள் மீது வீண்பழியை சுமத்தாமல், காசநோய் தடுப்பிற்கான சரியான சிகிச்சை முறையை மேற்கொள்ளும்போது மட்டுமே காசநோயை கட்டுக்குள் வைக்க முடியும்.
அரசு அல்லது சுகாதாரத்துறை மேற்கூறப்பட்ட கருத்துகளுக்கு செவிசாய்க்குமா?
நன்றி - மருத்துவர். புகழேந்தி.

டாபிக்ஸ்