‘பொங்கலோ பொங்கல்’ வழக்கமாக இல்லாமல் இந்த பொங்கலுக்கு கல்கண்டு பொங்கல் செய்து பாருங்கள்!
கல்கண்டு பொங்கல் செய்வது எப்படி என்று பாருங்கள்.
![‘பொங்கலோ பொங்கல்’ வழக்கமாக இல்லாமல் இந்த பொங்கலுக்கு கல்கண்டு பொங்கல் செய்து பாருங்கள்! ‘பொங்கலோ பொங்கல்’ வழக்கமாக இல்லாமல் இந்த பொங்கலுக்கு கல்கண்டு பொங்கல் செய்து பாருங்கள்!](https://images.hindustantimes.com/tamil/img/2025/01/05/550x309/kalkandu_pongal_1736062156236_1736062164710.jpg)
தைப்பொங்கல் என்பது தமிழர்களின் அறுவடை திருவிழாவாகும். இது தமிழர்களால் நான்கு நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இது தமிழ் மாதமான தையில் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை சூரியனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இது வட இந்தியாவில் மகர சங்கராந்தியாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் இந்தப் பண்டிகை பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை போகியுடன் துவங்குகிறது. போகியன்று மக்கள் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதன் அடிப்படையில் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிக்கிறார்கள். அடுத்த நாள் தை முதல் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் தேடி விதை என்பதற்கு ஏற்ப, ஆடி மாதம் விதைத்த நெல் தை மாதத்தில் அறுவடைக்கும் வந்துவிடும். அந்த புதுநெல்லைப் போட்டு பொங்கலிடுகிறார்கள். அந்தப் பொங்கலை உழவுத்தொழிலுக்கு துணை நின்ற சூரியனுக்கும், இயற்கைக்கும் படையிலிட்டு வணங்குகிறார்கள். அடுத்த நாள் மாட்டுப்பொங்கல், அன்றைய தினம் உழவுத் தொழிலுக்கு உதவி செய்த கால்நடைகளுக்கு குறிப்பாக மாடுகளை குளிப்பாட்டி, அவற்றை அலங்கரித்து, அவற்றுக்கு பொங்கலிட்டு, ஊட்டி மகிழ்கிறார்கள். அடுத்த நாள் காணும் பொங்கல், இந்த நாளில் மக்கள் பல்வேறு சுற்றுலா தலங்களும் சென்று புதிய இடங்களைக் கண்டு மகிழ்கிறார்கள். இதனால் இந்த நான்கு நாட்களும் உழைத்து, களைத்த தமிழர்கள் கொண்டாடி மகிழ்கிறார். தமிழ்நாட்டின் முக்கிய பண்டிகயான பொங்கல் நான்கு நாட்கள் நிறைவுடனும் மகிழ்வுடனும் இவ்வாறு கொண்டாடப்படுகிறது.
சூரிய பகவான் வடக்கு நோக்கிய தனது பயணத்தை துவக்கும் நாளில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அது உத்ரநாராயணா என்று அழைக்கப்படுகிறது. அன்று மகர ராசியில் சூரியன் நுழைகிறார். பின்னர் பொங்கல் என்று வந்தது. அதற்கு பொங்குதல் மற்றும் வேகவைப்பது என்று பொருள். அன்று பொங்கல் என்ற உணவு சமைக்கப்படுவதால் அப்படி அழைக்கப்படுகிறது.
பொங்கல் அன்று சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண் பொங்கல் தயாரிக்கப்படுகிறது. மேலும் அன்று வாசலில் கோலங்கள் போட்டு வர்ணிக்கப்படுகிறது. வீடுகளை சுத்தம் செய்து மாவிலை தோரணங்கள் கட்டி மக்கள் அலங்கரிக்கிறார்கள். பொதுவாக பொங்கல் என்றால் பால் பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் என்ற இரண்டு வகை பொங்கல்தான் வைக்கப்படும். ஆனால் நீங்கள் இந்த ஆண்டு வித்யாசமாக கற்கண்டில் பொங்கல் செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி – ஒரு கப்
பால் – 2 கப்
முந்திரி – ஒரு கைப்பிடியளவு
திராட்சை – ஒரு கைப்பிடியளவு
நெய் – 4 ஸ்பூன்
கற்கண்டு – 150 கிராம் (ஒன்றரை கப்)
ஏலக்காய் – 2
செய்முறை
பச்சரிசியை நன்றாகக் கழுவி 2 கப் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக குழைய வேகவைத்து வடித்துக்கொள்ளவேண்டும். கற்கண்டை பொடித்து குழைந்த சாதத்தில் சேர்த்து கிளறவேண்டும். சாதம் குழைந்து வரும்போது, அடுப்பை சுத்தமாக குறைத்துவிட்டு, கற்கண்டை தூவி, கற்கண்டு உருகும் வரை கிளறவேண்டும்.
அடுத்து ஏலக்காயை பொடித்து தூவவேண்டும். தாளிப்பு கரண்டியில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சை என அனைத்தையும் வறுத்து கற்கண்டு பொங்கலில் சேர்த்து கிளறவேண்டும். நெய்யை ஊற்றி மணக்க, மணக்க இறக்கினால் கற்கண்டு பொங்கல் தயார். இது வித்யாசமான சுவையைத் தரும். வழக்கமான பொங்கலைப் போல் இருக்காது. உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு வழக்கமான பொங்கல் செய்து போர் அடித்தால், இந்தப் பொங்கல் அவர்களுக்கு சூப்பர் சுவையைத் தரும்.
குறிப்பு
டைமண்ட் கற்கண்டு எடுத்துக்கொள்ளக்கூடாது. பெரிய கட்டி கற்கண்டுதான் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
![Whats_app_banner Whats_app_banner](/_next/static/media/WhatsappChnlmob.efd407a6.png)
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்