Pongal 2025 : நாளை பொங்கல் பண்டிகை; தைப்பொங்கலும், மாட்டுப்பொங்கலும் வைக்க உகந்த நேரங்கள் என்ன?
தைப்பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கல் வைக்க உகந்த நேரங்களை தெரிந்துகொள்ளுங்கள்.

தைப்பொங்கல் என்பது தமிழர்களின் அறுவடை திருவிழாவாகும். இது தமிழர்களால் நான்கு நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இது தமிழ் மாதமான தையில் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை சூரியனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இது வட இந்தியாவில் மகர சங்கராந்தியாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் இந்தப் பண்டிகை பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை போகியுடன் துவங்குகிறது. போகியன்று மக்கள் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதன் அடிப்படையில் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிக்கிறார்கள். அடுத்த நாள் தை முதல் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் தேடி விதை என்பதற்கு ஏற்ப, ஆடி மாதம் விதைத்த நெல் தை மாதத்தில் அறுவடைக்கும் வந்துவிடும். அந்த புதுநெல்லைப் போட்டு பொங்கலிடுகிறார்கள். அந்தப் பொங்கலை உழவுத்தொழிலுக்கு துணை நின்ற சூரியனுக்கும், இயற்கைக்கும் படையிலிட்டு வணங்குகிறார்கள். அடுத்த நாள் மாட்டுப்பொங்கல், அன்றைய தினம் உழவுத் தொழிலுக்கு உதவி செய்த கால்நடைகளுக்கு குறிப்பாக மாடுகளை குளிப்பாட்டி, அவற்றை அலங்கரித்து, அவற்றுக்கு பொங்கலிட்டு, ஊட்டி மகிழ்கிறார்கள். அடுத்த நாள் காணும் பொங்கல், இந்த நாளில் மக்கள் பல்வேறு சுற்றுலா தலங்களும் சென்று புதிய இடங்களைக் கண்டு மகிழ்கிறார்கள். இதனால் இந்த நான்கு நாட்களும் உழைத்து, களைத்த தமிழர்கள் கொண்டாடி மகிழ்கிறார். தமிழ்நாட்டின் முக்கிய பண்டிகயான பொங்கல் நான்கு நாட்கள் நிறைவுடனும் மகிழ்வுடனும் இவ்வாறு கொண்டாடப்படுகிறது.
சூரிய பகவான் வடக்கு நோக்கிய தனது பயணத்தை துவக்கும் நாளில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அது உத்ரநாராயணா என்று அழைக்கப்படுகிறது. அன்று மகர ராசியில் சூரியன் நுழைகிறார். பின்னர் பொங்கல் என்று வந்தது. அதற்கு பொங்குதல் மற்றும் வேகவைப்பது என்று பொருள். அன்று பொங்கல் என்ற உணவு சமைக்கப்படுவதால் அப்படி அழைக்கப்படுகிறது. பொங்கல் அன்று சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண் பொங்கல் தயாரிக்கப்படுகிறது. மேலும் அன்று வாசலில் கோலங்கள் போட்டு வர்ணிக்கப்படுகிறது. வீடுகளை சுத்தம் செய்து மாவிலை தோரணங்கள் கட்டி மக்கள் அலங்கரிக்கிறார்கள். பொதுவாக பொங்கல் என்றால் பால் பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் என்ற இரண்டு வகை பொங்கல்தான் வைக்கப்படும். ஆனால் நீங்கள் இந்த ஆண்டு வித்யாசமாக கருப்பட்டியில் பொங்கல் செய்து பாருங்கள்.
இந்தாண்டு எத்தனை மணிக்கு பொங்கல் வைக்கலாம்? நாளை பொங்கல் விழாவைக் கொண்டாட தமிழர்கள் அனைவரும் தயாராகி வருகிறார்கள். அவர்களின் கொண்டாட்டம் துவங்கிவிட்ட நிலையில், இன்று போகிப்பொங்கல் முடிந்துவிட்டது. நாளை முக்கியமான ஒன்று பொங்கல் வைக்க உகந்த நேரம் எது என்பதுதான்.
குரோதி வருடம் தை மாதம் 1ம் தேதி (14-01-2025) செவ்வாய்க்கிழமை பிரதமை திதி, பூச நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபதினத்தில் பகல் 11.58 மணிக்கு தை மாத பிறக்கிறது.
தை பொங்கல் வைக்க நல்ல நேரம்
தை 1ம் தேதி (14-01-2025)
செவ்வாய்க்கிழமை
காலை 8.00 மணிக்குமேல் 9.00
மணிக்குள் சுக்கிர ஹோரையில்
(அ) பகல் 12.00 மணிக்குமேல் 1.00 மணிக்குள்
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம். காலையில் பொங்கல் வைத்தால், மதியம் படையலிட்டு, மதியத்துக்கு மேல் மாதம் பிறந்த பின்னர்தான் சாப்பிடவேண்டும். மதியம் வைத்தால் உடனடியாக பொங்கல் வைத்துவிட்டு, அப்போது படையலிட்டு, சாப்பிடலாம்.
ராகு காலம் : 3 - 4.30
எமகண்டம் : 9 - 10.30
மாட்டு பொங்கல் வைக்க நல்ல நேரம்
தை 2ம் தேதி (15-01-2025)
புதன்கிழமை
காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள்
(அ) காலை 9 மணிக்குமேல் 10 மணிக்குள்
பொங்கல் வைக்கலாம்.
ராகு காலம் : 12 - 1.30
எமகண்டம் : 7.30 – 9
இந்த நேரத்தில் பொங்கலிட்டு மக்கள் படைத்து, கொண்டாடுங்கள். மகிழ்ச்சி எங்கும் பொங்கட்டும். அனைவருக்கும் ஹெச்.டி தமிழ் சார்பில் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்