TN Caesarean Rate : தமிழகத்தில் அதிகரிக்கும் சிசேரியன் அறுவைசிகிச்சைகள் – காரணம் இதுதான் – அதிர்ச்சி ஆய்வு!
TN Caesarean Rate : தமிழகத்தில் அதிகாரித்து வரும் சிசேரியன் அறுவைசிகிச்சைகளைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தேவையான மருத்துவ காரணங்கள் தவிர்த்து சிசேரியன் அறுவைசிகிச்சை அதிகரிக்க காரணங்கள் என்ன என்பதை கண்டறிந்து குறைகளைக் களைய தமிழக அரசு முன்வருமா? தேவையான மருத்துவ காரணங்களுக்கு சிசேரியன் அறுவைசிகிச்சை செய்வது தாய்-சேய் நலம் காக்க உதவும்.
உலக சுகாதார நிறுவனம், ஒரு சமூகத்தில் 10-15 சதவீதம் மட்டுமே சிசேரியன் அறுவைசிகிச்சை செய்யப்பட்டால் மட்டுமே கருவுற்ற தாயின் இறப்பு விகிதம் குறையும் என்றும், அதற்கு மேல் சிசேரியன் அறுவைசிகிச்சை இருந்தால், அது பண நோக்கத்திற்காக,தேவையான மருத்துவ காரணங்கள் இல்லாமல் செய்யப்படுவதாக கணக்கில்கொள்ள வேண்டும் என தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
ஆனால் தமிழக நிலை என்ன?
2015-16களில் தமிழக அரசு மருத்துவமனைகளில் 27.6 சதவீதம் பேருக்கு சிசேரியன் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 2019-21ல் அது 38.9 சதவீதம் பேருக்கு என உயர்ந்துள்ளது.
அதாவது அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்கு செல்லும் 100 பேரில் ஏறக்குறைய 40 பேருக்கு சிசேரியன் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இந்திய சராசரியில் அது 2019-21ல் 16 சதவீதம் எனக் குறைவாகவே உள்ளது.
2015-16ல் தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைகளில் 52.7 சதவீதம் பேருக்கு சிசேரியன் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 2019-21ல் அது 64.2 சதவீதம் என மிக அதிகமாக உயர்ந்துள்ளது. இந்திய சராசரி அந்த ஆண்டில் 50 சதவீதம் என உள்ளது.
எனவே, தனியார் மருத்துவமனைகளில் தமிழகத்தில் தேவையற்று சிசேரியன் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுவதைத் தடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
அரசு மருத்துவமனைகளிலும், சிசேரியன் அறுவைசிகிச்சை உலக சுகாதார நிறுவன பரிந்துரைக்கு மாறாக (சிசேரியன் அறுவைசிகிச்சை 10-15 சதவீதம் மட்டுமே இருந்தால் தான் நன்மை பயக்கும்) அதிகமாக உள்ளது.
இதில் கொடுமை என்னவெனில், 2015-16 - 2019-21 காலகட்டத்தில் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பிரச்னைகள் 42.2 சதவீதத்தில் இருந்து, 39.5 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் சிசேரியன் அறுவைசிகிச்சை குறைவதற்கு பதில் அதிகரித்துள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் தமிழகத்தின் ஏழை மக்களில் 73 சதவீதம் பேருக்கு சிசேரியன் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
வசதிபடைத்தவர்கள் (Non-poor) மத்தியில் அது 64 சதவீதம் என ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.
எனவே, ஏழை மக்களுக்கு தேவையற்று சிசேரியன் சிகிச்சை அதிகம் மேற்கொள்ளப்படுவது தெளிவு.
இதைப்பற்றி தீர ஆராய்ந்து, அதை முறைப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
நன்கு படித்தவர்கள், பிரசவத்திற்கு முன் மருத்துவமனை பரிசோதனைகள் அதிகம் மேற்கொள்பவர்கள் மத்தியில், சிசேரியன் அறுவைசிகிச்சை குறைவதற்கு பதில் அதிகமாகியுள்ளது.
அதிக எடையுள்ள பெண்கள், 35-49 வயது பெண்கள், முதல் பிரசவ பெண்கள் மத்தியில் சிசேரியன் அறுவைசிகிச்சை ஏறக்குறைய 2 மடங்கு அதிகம் மேற்கொள்ளப்படுகிறது.
முதல் பிரசவம் சிசேரியன் மூலம் நடந்தால், அடுத்த பிரசவமும், (வழக்கமான பிரசவத்திற்கு வாய்ப்பிருந்தும்) சிசேரியன் மூலம் மட்டுமே நடைபெறும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.
மேற்சொல்லப்பட்ட செய்திகள் BMC Pregnancy and Child-birth எனும் ஆய்வுக் கட்டுரையில் வெளிவந்துள்ளது.
மருத்துவ காரணங்கள் இல்லாமல் தேவையற்று சிசேரியன் அறுவைசிகிச்சை தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் சூழலில், பண விரயம், தேவையற்ற மருத்துவ பிரச்னைகள் (சர்க்கரை அளவு தாய்-சேய்க்கு குறைதல், பிறக்கும் குழந்தைகளுக்கு மூச்சு விடுதலில் சிரமம் - Infant Respiratory Distress syndrome இவை சிசேரியன் அறுவைசிகிச்சையால் ஏற்படும் பிரச்னைகள்) ஏற்படுவதைத் தடுக்க தமிழக அரசு முனைப்பு காட்டி, களத்தில் இறங்கி செயல்பட்டு, மருத்துவ காரணங்கள் தவிர்த்து, தேவையற்று சிசேரியன் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படுவதை தடுக்க வேண்டும்.
நன்றி – மருத்துவர். புகழேந்தி.

டாபிக்ஸ்