Vatha Kulambu : ஸ்ரீரங்கம் ஐய்யங்கார் ஸ்பெஷல் வத்தக்குழம்பு! நாவில் எச்சில் ஊறும்; சூப்பர் சுவையானது! இதோ ரெசிபி!
ஸ்ரீரங்கம் ஐய்யங்கார் ஸ்பெஷல் வத்தக்குழம்பு செய்வது எப்படி

எத்தனை வத்தக்குழம்புகள் இருந்தாலும் ஸ்ரீரங்கம் ஜய்யங்கார் வீட்டு வத்தக்குழம்புக்கு இருக்கும் சுவையே தனிதான். ஒருமுறை ருசித்தால் அவர்கள் எப்படி செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்படும். அதற்கு நீங்கள் மெனக்கெடவே வேண்டாம். இதோ அவர்கள் எப்படி வத்தல் குழம்பு செய்கிறார்கள் என ஆராய்ந்து, கீழே அதற்கான ரெசிபியைக் கொடுத்துள்ளோம். இதை பின்பற்றி உங்கள் வீட்டு வத்தக் குழம்பின் ருசியை அதிகரித்துக்கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
சுண்டைக்காய் வத்தல் – ஒரு கப்
வெந்தயம் – 2 ஸ்பூன்
உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
வர மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
வரமிளகாய் – 4
புளி – எலுமிச்சை அளவு (சூடான நீரில் சிறிது நேரம் ஊறவைத்து கரைத்துக்கொள்ளவேண்டும்)
உப்பு – தேவையான அளவு
சின்ன வெங்காயம் – 20 (பொடியாக நறுக்கிகொள்ளவேண்டும்)
வெல்லம் – ஒரு ஸ்பூன் (பொடித்தது)
அரிசி – ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் வெந்தயத்தை வறுத்து, அதை ஆறவைத்து மிக்ஸி ஜார் அல்லது உரலில் சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும்.
அதே கடாயில் வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து, ஒரு தட்டில் சேர்த்து ஆறியவுடன் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து காய்ந்த மிக்ஸி ஜாரில் பொடியாக பொடித்துக்கொள்ளவேண்டும்.
மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சேர்த்து, சூடானவுடன் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து அது பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் சுண்டக்காய் வத்தல் சேர்த்து வதக்கி, அதனுடன், வெந்தயப் பொடி சேர்த்து கிளறி விட வேண்டும்.
அடுத்து, அதில் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும், கொதி வந்த பின்னர், அதில் பொடித்து வைத்து ஸ்பெஷல் மசாலாப் பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெல்லம் சேர்த்து கிளறவேண்டும்.
அடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். நன்றாக கொதி வந்தவுடன் எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் இறக்கினால், சூப்பர் சுவையான ஸ்ரீரங்கம் ஐய்யங்கார் ஸ்பெஷல் வத்தக்குழம்பு தயார். இதை சூடான சாதத்தில் போட்டு, நல்லெண்ணெய் விட்டு சாப்பிட சுவை அள்ளும்.
அப்பளம் அல்லது ஆம்லேட் மட்டுமே போதும். வேறு சைட் டிஷ்கள் தேவையில்லை. இதை ஒருமுறை ருசித்தால், நீங்கள் அடிக்கடி செய்வீர்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்தக்குழம்பை ஒரு வாரம் வரை ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டு சாப்பிடலாம். வெளியூர் சுற்றுலாக்கள் செல்லும்போதும், இதை எடுத்துக்கொண்டு சென்றால், சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட்டுக்கொள்ளலாம்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்