Pepper Chutney : மிளகில் சட்னி செய்ய முடியுமா? சளியை அடித்து விரட்டும்; நல்ல காரஞ்சாரமாக இருக்கும்!
Pepper Chutney : மிளகில் சட்னி செய்ய முடியுமென்றால் உங்களுக்கு ஆச்சர்யம் அளிக்கிறதா? சளியை அடித்து விரட்டும்; நல்ல காரஞ்சாரமாக இருக்கும் இந்த சட்னியை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள் .

தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகு – கால் கப்
இஞ்சி – ஒரு இன்ச் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – 2 கொத்து
தக்காளி – 2
வரமிளகாய் – 3
தேங்காய் துருவல் – ஒரு கப்
நாட்டுச்சர்க்கரை – அரை ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு- கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
வர மிளகாய் – 3
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி மிளகை வறுத்து, அரித்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் அதே எண்ணெயில், பொடியாக நறுக்கிய ஒரு இன்ச் இஞ்சியை சேர்த்து வதக்கவேண்டும். பின்னர் கறிவேப்பிலை சேர்த்து பொரியவிட்டு, தக்காளியை சேர்த்து நன்றாக குழையும் வரை வதக்கவேண்டும்.
பச்சை வாசம் போன பின்னர், வரமிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவேண்டும். தேங்காய் பொன்னிறமானதும், அடுப்பை அணைத்துவிட்டு, ஏற்கனவே வறுத்து வைத்துள்ள மிளகை சேர்த்து நன்றாக கலந்து ஆறவிடவேண்டும்.
ஆறியபின்னர், ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அரைக்கும்போது சிறிது நாட்டுச்சர்க்கரையை சேர்த்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு, உளுந்து, சீரகம் தாளித்து, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து பொரிந்தவுடன் அதில் அரைத்த சட்னியை சேர்த்து நன்றாக கலந்து இறக்க வேண்டும்.
இந்தச்சட்னி இனிப்பு, புளிப்பு, காரம் என மூன்று சுவையில் நன்றாக இருக்கும். இந்த தோசையைத் தொட்டுக்கொண்டு சாப்பிடும்போது எத்தனை தோசைகள் வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கமுடியும். அனைத்து டிஃபன் வகைகளுக்கும் இந்த சட்னி நன்றாகவே பொருந்தினாலும், தோசைக்கு செம்ம காம்போ.
குறிப்பாக மழைக்காலத்தில், சளி, இருமல் எகிறும்போது, இந்த சட்னியை அரைத்து சாப்பிடக் கொடுத்துவிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளிக்கும் நிவாரணம் அளிக்கும்.
இந்தச்சட்னியில் உள்ள பொருட்கள் அனைத்தும் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கக்கூடியவைதான். இனி மழைக்காலம் துவங்கிவிடும். கட்டாயம் இந்த சட்னியை செய்து சாப்பிடு மகிழுங்கள்.
மிளகு தரும் நன்மைகள்
கருப்பு தங்கம் என்று அழைக்கப்படும் மிளகு உடலுக்கு பல்வேறு நன்மைகளைத்தருகிறது. வரலாற்று சிறப்புமிக்க மசாலாக்களுள் ஒன்று. இது உணவுகளுக்கு பிரிசர்வேட்டிவாகவும், சுவையை கொடுப்பதாகவும் உள்ளது. இது சூடான உணவுடன் சேர்த்து உட்கொள்ளப்படுகிறது.
தென்னிந்தியாவில் கேரளா, கோவா மற்றும் கர்நாடகாவில் அதிகம் விளைகிறது. ரோம், கிரீஸிலும் உள்ளது. மத்திய காலங்களில் இது பிரபலமானது.
உலகின் 39 சதவீத மிளகு உற்பத்தி வியட்நாமில் இருந்து கிடைக்கப்படுகிறது. இந்தியா மற்றும் பிரேசில் 10 சதவீத உற்பத்தியையும், இந்தோனேஷியா 15 சதவீத உற்பத்தியையும் கொண்டுள்ளது.
சுவைக்கு பயன்படுத்தப்படுவது மட்டுமல்ல எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இதில் உள்ள பயோஆக்டிவ் உட்பொருட்கள் மற்றும் பைப்பெரின் ஆகியவை மிகவும் முக்கியமானது.
பைப்பரின் இயற்கை ஆல்கலைட் ஆகிறது. இதுதான் கார சுவையை மிளகுக்கு தருகிறது. இதுதான் முக்கிய உட்பொருளும் ஆகிறது. இதில்தான் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் குவிந்துள்ளன.
பைப்பெரின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட், நாள்பட்ட நோய்களான இதய நோய்கள், நரம்புக்கோளாறுகள் ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது.
மிளகை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அது உங்களுக்கு ரத்தத்தில் ஊட்டச்சத்துக்கள் சரியான அளவில் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது.
செரிமான ஆரோக்கியம் மறறும் குடல் நலனுக்கு உதவுகிறது.
உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது.