Parupu Kulambu : தினமும் ஒரே மாதிரி சாம்பார் போர் அடிக்கும்போது, இதோ பருப்புக்குழம்பு செய்வது எப்படி எனப்பாருங்கள்!
Parupu Kulambu : தினமும் ஒரே மாதிரி சாம்பார் போர் அடிக்கும்போது பருப்புக்குழம்பு செய்வது எப்படி என்று பாருங்கள்.

இந்த குழம்புக்கு பருப்பு குறைவான அளவு போதும். ஆனால் குழம்பு அதிகம் வரும். ஒரே மாதிரி குழம்பு போர் அடிக்கும்போது இதுபோன்ற பருப்பு குழம்பு உங்களுக்கு வித்யாசமான சுவையைத் தரும். இதைச் செய்வதும் எளிது. அதிகம் செய்யும் சாம்பார் ஒரே சுவையாக இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும். இதற்கு காய்கறிகள் எதுவும் தேவையில்லை. இதற்கு தேவையான பருப்பை ஊறவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
தேவையான பொருட்கள்
பருப்பு – ஒரு கப்
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 8 பல்
பச்சை மிளகாய் – 4
தக்காளி – 1
வரமல்லி – ஒரு ஸ்பூன் (தட்டியது)
சீரகம் – கால் ஸ்பூன்
மிளகு – 10
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய்த் தூள் – ஓரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
(இதில் சாம்பார் பொடி சேர்க்கக்கூடாது. சாம்பார் பொடி சேர்த்தால் அது சாம்பாரின் சுவையை மட்டுமே கொடுக்கும். ஆனால், அது வழக்கமான சுவையாக இருக்கும் என்பதால், அதை நீங்கள் கட்டாயம் சேர்க்கக்கூடாது)
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
தேங்காய்த் துருவல் – ஒரு கப்
சீரகம் – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
சின்ன வெங்காயம் – 2
(மசாலா அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும். மிகவும் வழுவழுப்பாக அரைக்கக்கூடாது)
தாளிக்க தேவையான பொருட்கள்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
வர மிளகாய் – 3
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பூண்டு – 4 பல் (தட்டியது)
பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 6 (பொடியாக நறுக்கியது)
செய்முறை
பருப்பு, சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி, வரமல்லி, சீரகம், மிளகு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் என அனைத்தையும் ஒரு குக்கரில் சேர்த்து பருப்பு மலரும் அளவுக்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். ஆனால், குழைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டும். பருப்பு குழைந்துவிட்டால் சுவை நன்றாக இருக்காது.
பருப்புடன் அனைத்தும் சேர்த்து கலந்து வேகவிடவேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவேண்டும். அடுத்து தேங்காய் விழுது மற்றும் உப்பு சேர்த்துக்கொள்ளவேண்டும். தேங்காய் ஊற்றி ஓரிரு நிமிடங்கள் கொதித்தால் போதும். அதிக நேரம் கொதிக்கவிடக்கூடாது.
அடுத்து ஒரு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், கடுகு, உளுந்து, சீரகம், கிள்ளிய வரமிளகாய், கறிவேப்பிலை, தட்டிய பூண்டு பல், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் என அனைத்தும் சேர்த்து நன்றாக பொரிந்தவுடன் சாம்பாரில் சேர்த்துவிடவேண்டும்.
இது சூப்பர் சுவையான பருப்பு குழம்பு ஆகும். இதை நீங்கள் சாதம், டிஃபன் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒன்றாக இது இருக்கும். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்