வேப்பம்பூ ரசம் : கோடைக் காலத்தில் பூத்துக் குலுங்கும் வேப்பம் பூக்களில் சுவையான ரசம் தயாரிப்பது எப்படி பாருங்கள்!
வேப்பம்பூ ரசம் : தற்போது வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. அதில் ரசம் வைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. அதில் ரசம் வைப்பது எப்படி என்று பாருங்கள்.

வேப்பம் பூக்கள் கோடைக் காலத்தில் பூத்துக்குலுங்கும். இதை நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. இதன் நன்மை குறித்து மருத்துவர் காமராஜ் கூறுகையில், வேப்பம் பூக்களை சேகரித்து, நிழலில் உலர்த்தி, நன்றாக காய்ந்தவுடன் பொடித்து ஒரு டப்பாவில் போட்டு அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும். சர்க்கரை நோயாளிகள், புற்றுநோயாளிகள், சரும நோயாளிகள் மற்றும் நாள்பட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என அனைவரும் சாப்பிடலாம். தீராத நோய் உள்ளவர்கள் இதை சாப்பிட அவர்களின் நோய்கள் குணமாகும்.
நோயாளிகள் எப்படி பயன்படுத்தலாம்?
சர்க்கரை நோயாளிகள் இந்தப்பொடியை இரண்டு முதல் 4 கிராம் அளவு எடுத்து சூடான தண்ணீரில் கலந்து காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் சாப்பிடலாம். உணவுக்கு முன்னர் சாப்பிடுவது நல்லது.
மூட்டு வலி உள்ளவர்களும் இதை சூடான தண்ணீரில் கலந்து ஆகாரத்துக்கு பின்னர் பருகுவது நல்லது.
சரும நோயாளிகள் சூடான தண்ணீர் அல்லது தேனுடன் கலந்து ஆகாரத்துக்கு முன்னர் சாப்பிடவேண்டும்.
இதை அளவோடு எடுத்துக்கொண்டால் அந்தந்த நோய்களுக்கு நிவாரண கொடுக்கும். இந்த பிரச்னைகள் உள்ளவர்களுக்கு வேப்பம் பூ கசக்காது. இனிக்கும். இவ்வாறு வேப்பம் பூக்களின் நன்மைகள் குறித்து தெரிவித்துள்ளார். அதில் ரசம் வைப்பது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
• புளி – எலுமிச்சை அளவு
• உப்பு – ஒரு ஸ்பூன்
• வர மிளகாய் – 4
தாளிக்க தேவையான பொருட்கள்
• நெய் – ஒரு ஸ்பூன்
• வேப்பம்பூ – ஒரு டேபிள் ஸ்பூன்
• துவரம் பருப்பு – ஒரு ஸ்பூன்
செய்முறை
1. புளியை சூடான தண்ணீரில் ஊறவைத்து கரைத்துக்கொள்ளவேண்டும்.
2. கடாயில் நெய்யை சேர்த்து சூடான வர மிளகாயை கிள்ளி சேர்த்து தாளிக்கவேண்டும். அடுத்து கரைத்த புளி தண்ணீரை சேர்க்கவேண்டும். இதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்கவிடவேண்டும்.
3. ஒரு கடாயில் நெய் சேர்த்து அது சூடானவுடன் அதில் கடுகு சேர்த்து தாளிக்கவேண்டும. அது பொரிந்தவுடன், கறிவேப்பிலை மற்றும் துவரம் பருப்பு சேர்த்து வறுக்கவேண்டும். இதை தனியாக வைத்துவிடவேண்டும்.
4. அதே கடாயில் வேப்பம் பூக்களை சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும். அது பொன்னிறமானவுடன் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவேண்டும். புளித்தண்ணீரை சேர்த்து, நுரை கூட்டி வந்தவுடன், தாளிப்பையும் சேர்த்து இறக்கினால் சூப்பர் சுவையான வேப்பம் பூ ரசம் தயார்.
இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். வேப்பம் பூ ரசத்தை செய்து வைத்து சிறிது நேரம் கழித்துதான் சாப்பிட வேண்டும். அப்போதுதான் அதன் மருத்துவ குணங்கள் ரசத்தில் இறங்கியிருக்கும்.

டாபிக்ஸ்