மட்டன் முந்திரி சுக்கா; மீண்டும் வேண்டும் என நினைப்பீர்கள்; கட்டாயம் ஒருமுறை செய்ங்க!
மட்டன் முந்திரி சுக்கா செய்வது எப்படி என்று பாருங்கள்.
சுக்கா மசாலாவுக்கு தேவையான பொருட்கள்
சீரகம் - அரை கைப்பிடி, மல்லி விதை - ஒரு கைப்பிடி, மிளகு - அரை கைப்பிடி, நல்ல காரமான வரமிளகாய் - இருபத்து ஐந்து இது அனைத்தையும் ஒரு வாணலியில் ஆயில் இல்லாமல் நன்றாக மணக்க வறுத்து மிக்சியில் பொடியாக அரைக்கவேண்டும்.
சுக்காவுக்கு தேவையான பொருட்கள்
மட்டன் ஒரு கிலோ (எப்பொழுதும் சுக்காவிற்கு ஆட்டு இறைச்சியை கீழ்க்கண்டது போல கலந்து வாங்கவேண்டும். 400 கிராம் நெஞ்சு எலும்பு, 400 கிராம் போன்லெஸ் மட்டன், 100 கிராம் நல்லி எலும்பு, 100 கிராம் கொழுப்பு) இப்படி வாங்கிச் செய்தால் ருசி பிரமாதமாக இருக்கும்.
தக்காளி - 200 கிராம், சின்ன வெங்காயம் - 100 கிராம், பெரிய வெங்காயம் - 1/4 கிலோ, இஞ்சி - பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன், நீங்கள் அரைத்த சுக்கா மசாலா - 3 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், கிராம்பு, ஏலக்காய், பட்டை, அன்னாசிப் பூ, சோம்பு - சிறிது, கொத்தமல்லித் தழை - 1 கைப்பிடி, கறிவேப்பிலை - 1 சிறு சரம், ஆயில் - தேவைக்கு, உப்பு - தேவைக்கு.
முழு முந்திரி - 150 கிராம், முந்திரி வறுக்க நெய் - 100 கிராம்
செய்முறை –
முதலில் குக்கரில் ஆயில் ஊற்றி ஏலக்காய் உள்ளிட்ட மசாலா பொருட்களைப் போட்டு நன்கு வதக்கவும். பின்பு அதில் பெரிய மற்றும் சிறிய வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும். பிறகு இதில் இஞ்சி - பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும் பின்னர் அதில் தக்காளி சேர்த்து நன்கு குழைய வரும் வரை வதக்கவும்.
இதில் கழுவி வைத்த மட்டன் சேர்த்து அதன் வெங்காய நிறத்தில் இருந்து வெள்ளை நிறம் வரும் வரை நன்கு வதக்கவும். பின்னர் இதில் மஞ்சள் தூள், சுக்கா மசாலா, உப்பு சேர்த்து நன்கு நீர் பிரியும் வரை வதக்கவும். பின்னர் அதில் ஒரு டம்ளர் நீர் சேர்த்து மட்டன் வேகும் வரை விசில் வைக்கவும். நீங்கள் வாங்கிய இறைச்சியின் தன்மைக்கு எவ்வளவு நேரம் வேகும் என்பதை அறிந்து வேகவைக்கவும்.
பொதுவாக 8-10 விசில்கள் வைக்கலாம். பின்னர் குக்கர் ஆவி அடங்கியதும். ஒரு பெரிய வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து மட்டன் துண்டுகள் மற்றும் அந்த கிரேவியில் தண்ணீர் அதிகம் இருந்தால் பாதி அளவு இதில் சேர்த்து நன்கு சுருள வதக்கி எடுத்து இதில் உப்பு காரம் அளவு பார்த்துவிட்டு மசாலா சுருளுவதற்கு முன் சிறிது மிளகுத் தூள் அல்லது சுக்கா மசாலா சேர்க்கலாம்.
கடைசியாக நெய் விட்டு முந்திரிகளை வறுத்து நெய்யுடன் அந்த முந்திரியை இதில் சேர்த்து கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். இதை வேறு பாத்திரத்திற்கு மாற்றிய பின்னர் கொஞ்சம் சோற்றை அந்த சட்டியில் போட்டு சாப்பிட அட்டகாசமாக இருக்கும். இந்தக் குழம்பை இட்லி, தோசை, இடியாப்பம், அப்பம், பூரி, சப்பாத்தி, புரோட்டா என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம்.
நன்றி – வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்