Mutton Bone Masala : நச்சுன்னு செய்ங்க நல்லி எலும்பு மசாலா! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியம் உறுதி!
Mutton Bone Masala : குறிப்பாக நெஞ்செலும்பு மற்றும் கால் எலும்பை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது நமது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. எலும்பு என்றாலே பெரும்பாலும் சூப்பாக அதிகம் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் இதுபோன்ற ருசியான கிரேவிகளும் அதில் இருந்த செய்ய முடியும்.

தேவையான பொருட்கள்
நல்லி எலும்பு கறி – அரை கிலோ
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
சோம்பு – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
எலுமிச்சை சாறு – 4 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்
கிராம்பு – 2
பட்டை – ஒரு சிறு துண்டு
ஏலக்காய் – 1
சீரகம் – ஒரு ஸ்பூன்
வரமல்லி – ஒரு ஸ்பூன்
வரமிளகாய் – 7
மிளகு – ஒரு ஸ்பூன்
சோம்பு – ஒரு ஸ்பூன்
கசகசா – ஒரு ஸ்பூன்
பூண்டு – 7 பற்கள்
சின்ன வெங்காயம் – 16
துருவிய தேங்காய் – கால் கப்
முந்திரி – 15
செய்முறை
கடாயில் 3 ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி அதில் கிராம்பு, ஏலக்காய், பட்டை, மிளகு, வரமல்லி, வரமிளகாய், சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து மணக்க மணக்க வறுக்கவேண்டும்.
இவை பொன்னிறமாகும் வரை வரை குறைந்த தீயில் வறுக்கவேண்டும். இது பொன்னிறமானவுடன், கசகசாவை சேர்க்கவேண்டும். பின்னர் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து பச்சை வாசம் போக 5 நிமிடங்ளுக்கு மேல் வதக்கிக்கொள்ள வேண்டும்.
இதில் துருவிய தேங்காய் மற்றும் முந்திரி சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவேண்டும். இதை ஒரு தட்டில் எடுத்து ஆறவைத்து, ஆறியவுடன், மிக்ஸியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மிருதுவான பேஸ்டாக அரைத்து தனியே வைக்கவேண்டும்.
கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் சோம்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து ஓரிரு நிமிடங்கள் நன்றாக வதக்கவேண்டும்.
இதில் தக்காளி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து இன்னும் இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவேண்டும்.
இப்போது மட்டன் எலும்புகளைச் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். அரைத்த விழுதுடன் 2 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
பாத்திரத்தை மூடி சிறிது நேரம் அடுப்பை முற்றிலும் குறைத்து வேகவைக்க வேண்டும். பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும்.
இதன் மீது சிறிது கொத்தமல்லித்தழைகள் தூவவேண்டும். அட்டகாசமான நல்லி எலும்பு மசாலா தயார்.
சோறு, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி பரோட்டா இப்படி எதனுடன் பரிமாறினாலும் ருசியில் சளைக்காது.
க்ரேவி கெட்டியாக இருந்தால், உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். உப்பு மற்றும் காரத்தையும் தண்ணீரில் அளவுக்கு ஏற்ப சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள். மட்டனை பொருத்தவரை கறியைவிட எலும்பில்தான் சத்துக்கள் அதிகம். எலும்பை கடித்து மெல்லும்போது பற்கள் வலுவடைகின்றன.
எலும்பில்தான் சத்துக்கள் அதிகம் உள்ளதால், கறியைவிட எலும்பை சாப்பிடுவது வலியுறுத்தப்படுகிறது. எலும்பில் குழம்பு, சூப் என செய்து எடுத்துக்கொள்ளலாம்.
குறிப்பாக நெஞ்செலும்பு மற்றும் கால் எலும்பை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது நமது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. எலும்பு என்றாலே பெரும்பாலும் சூப்பாக அதிகம் சேர்த்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் இதுபோன்ற ருசியான கிரேவிகளும் அதில் இருந்த செய்ய முடியும்.
நன்றி – வெங்டேஷ் ஆறுமுகம் மற்றும் ஷயாம் ப்ரேம்.

டாபிக்ஸ்