முருங்கைக்கீரை அடை : பள்ளி விடுமுறை விட்டாச்சு; வீட்டில் இருக்கும் குட்டீஸ்க்கு ஏற்ற ஒரு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்!
முருங்கைக்கீரை அடை : அது அவர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்காது. கடையில் வாங்கும் செலவைவிட குறைவுதான். குழந்தைகளுக்கு ஏற்ற ஸ்னாக்ஸ் முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி என்று பாருங்கள்.

குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை துவங்கிவிட்டது. அவர்கள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு சாப்பிட ஸ்னாக்ஸ் இருந்துகொண்டே இருக்கவேண்டும். அதற்காக நீங்கள் கடையில் வாங்கிக்கொடுப்பதும் ஆரோக்கியமானதாக இருக்குமா என்ற அச்சம் ஏற்படும். எனவே நீங்கள் வீட்டிலேயே விச்யாசமான மற்றும் எளிமையான ஸ்னாக்ஸ்களை செய்து கொடுக்கலாம். அது அவர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்காது. கடையில் வாங்கும் செலவைவிட குறைவுதான். குழந்தைகளுக்கு ஏற்ற ஸ்னாக்ஸ் முருங்கைக்கீரை அடை செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
• புழுங்கல் அரிசி – ஒரு கப்
• கால் கப் – கடலை பருப்பு
• இஞ்சி – அரை இன்ச்
• பூண்டு – 4 பல்
• வர மிளகாய் – 4
• சீரகம் – அரை ஸ்பூன்
• பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
• உப்பு – தேவையான அளவு
• முருங்கைக்கீரை – ஒரு கைப்பிடியளவு
• எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு தாராளமாக எடுத்துக்கொள்ளவேண்டும்
செய்முறை
1. அரிசி மற்றும் கடலை பருப்பு இரண்டையும் நன்றாக அலசி இரண்டு மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.
2. இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இஞ்சி, பூண்டு, வர மிளகாய், சீரகம் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவேண்டும். அடுத்து ஒரு கைப்பிடியளவு முருங்கைக்கீரையையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். பல்ஸ் மோடில் அரைத்தால் போதும். கீரை நன்றாக அரைபடத்தேவையில்லை. ஒன்றிரண்டாக கலந்திருந்தாலே போதுமானது.
3. ஒரு பாத்திரத்தில் இதை மாற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கெட்டியான பதத்தில் மாவை தயார் செய்துகொள்ளவேண்டும்.
4. கடாயில் தாராளமாக எண்ணெய் சேர்த்து நன்றாக காய விடவேண்டும். மாவில் சிறு உருண்டை எடுத்து சிறிய வட்டமாகத் தட்டி சூடான எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுத்தால் நன்றாக் பூரிபோல் உப்பி வரும்.
5. இதை அப்படி எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதில் முருங்கைக்கீரை கலந்து இருப்பதால் இது ஆரோக்கியமான முருங்கைக்கீரை அடை ஆகும். இதை அப்படியே கூட சாப்பிட நன்றாக இருக்கும். ஆனால் இதற்கு தேங்காய், தக்காளி, வெங்காயம் சட்னி அரைத்து கொடுத்துவிட்டீர்கள் என்றால் குழந்தைகள் மகிழ்ந்து சாப்பிடுவார்கள்.
இதை எண்ணெயில் சேர்த்து பொரித்து எடுக்கலாம் அல்லது தோசைக்கல்லில் தட்டியும் எடுக்கலாம். எண்ணெயில் செய்தால் பிடிக்காதவர்கள், தோசைக்கல்லில் சேர்த்து அடைகளாக வார்த்துக்கொள்ளலாம். இரண்டுமே நன்றாக இருக்கும். ஆனால் இதுபோல் பொரித்து எடுப்பது மிகவும் நன்றாக இருக்கும்.
உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் நீங்கள் அடிக்கடி செய்யவேண்டும் என்று நினைப்பீர்கள். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

டாபிக்ஸ்