Milagu Kuzhambu Premix : அடிக்கடி சளி, இருமலால் குழந்தைகள் அவதிப்படுகிறார்களா? இதோ இந்தப் பொடி மட்டும் போதும்!
Milagu Kuzhambu Premix : அடிக்கடி சளி, இருமலால் குழந்தைகள் அவதிப்படுகிறார்களா? இதோ இந்தப் பொடி மட்டும் போதும். இதில் குழம்பு வைத்தால், உங்களுக்கு சளி, இருமல் ஏற்படாது.

இப்போது கோடையில் கூட மழை வருகிறது. மழை வந்தால் உடனே சளியும் சேர்ந்து வருகிறது. அதை தவிர்க்க வேண்டுமெனில் நாம் உடலுக்கு இயற்கையாக எதையாவது எடுத்து, சளி மற்றும் இருமல் தொற்று ஏற்படாமல் தடுக்கவேண்டும்.
தேவையான பொருட்கள்
மிளகு – ஒரு கப்
வரமல்லி – ஒரு கப்
கடலை பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்
உளுந்து – 3 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் – 7 (உங்கள் கார அளவுக்கு ஏற்ப அதிகரித்துக்கொள்ளலாம்)
கல் உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
பெருங்காயத் தூள் – கால் ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய் – 2 ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
சிவப்பு குண்டு மிளகாய் – 8 (முழுதாக)
செய்முறை
மிளகு, வரமல்லி, கடலை பருப்பு, உளுந்து, வர மிளகாய், கல் உப்பு, கறிவேப்பிலை, புளி என அனைத்தையும் தனித்தனியாக நல்ல மணம் வரும்வரை வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அனைத்தையும் ஒன்றுசேர்த்து ஆறவைத்து, அதில் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து காய்ந்த மிக்ஸி ஜாரில் பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, குண்டு மிளகாயை சேர்த்து இறக்கி, பொடித்து வைத்த பொடியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதை காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் சேர்த்து மூடி வைத்தால், மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
மிளகு குழம்பு பொடியை பயன்படுத்தி குழம்பு வைப்பது எப்படி?
ஒரு டம்ளர் தண்ணீரில் மூன்று அல்லது 4 ஸ்பூன் மிளகு குழம்புப் பொடியை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவேண்டும்.
இதை சூடான சாதத்தில் சேர்த்து, நல்லெண்ணெயுடன் சாப்பிட உங்களுக்கு உள்ள சளி, இருமல் காய்ச்சலைப்போக்கும்.
இதுபோன்ற ப்ரீமிக்ஸி பொடிகளை செய்து வைத்துக்கொள்வது உங்களுக்கு சமையலை எளிதாக்கிவிடும். நீங்கள் ஒரு அவசரமான நாளில் சாதம் மட்டும் வடித்துக்கொண்டு, இதை செய்துவிட்டால் போதும்.
இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளம் மட்டும் பொரித்துக்கொண்டால் போதும். ஒரு மதிய வேளை உணவு தயார். இதை லன்ச் பாக்ஸ்க்கும் வைத்துக்கொள்ளலாம்.
மற்ற எந்த ப்ரீமிக்ஸ் பொடிகளையும்விட இது மிகவும் சிறந்தது. இது இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம். சட்னி அரைக்க நேரம் இல்லை என்றாலோ பவர் இல்லை என்றாலோ அந்த நேரத்தில் இந்தப் பொடியை வைத்து சாமாளித்துவிடலாம்.
எனவே இதுபோன்ற ப்ரீமிக்ஸி பொடிகளை தயாரித்து வைத்துக்கொள்வது நல்லது. ஊருக்கு செல்லும் காலங்களில் மிகவும் உதவியாக இதுபோன்ற பொடிகள் இருக்கும்.
அடிக்கடி குழந்தைகள் சளி, இருமலால் அவதிப்பட்டால், அவர்களை மருந்து குடிக்க வைப்பதற்கு சிரமப்படவேண்டாம். இதுபோன்ற குழம்பை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டாலே அவர்களுக்கு இந்த தொல்லைகள் அடிக்கடி ஏற்படாது.

டாபிக்ஸ்