மசூர் தால் தோசை : தோசை செய்வதற்கு இனி உளுந்து தேவையில்லை; இந்த ஒரு பருப்பு மட்டும் போதும்!
மசூர் தால் தோசை : தென்னிந்தியாவில் பரவலாக செய்யப்படும் உணவான தோசையில் நீங்கள் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள். இந்த மசூர் தால் தோசையை செய்வது எப்படி என்று பாருங்கள்.

நாம் வீட்டில் தோசை செய்வதற்கு பொதுவாக உளுந்து மற்றும் அரிசியை ஊறவைத்து, அரைத்து, இரண்டையும் கலந்து உப்பு சேர்த்து புளிக்கவைத்துதான் தோசை செய்வோம். ஆனால் உங்கள் தோசையின் சுவையை நீங்கள் இன்னும் அதிகரிக்கவேண்டும் என்றால், அதற்கு நீங்கள் மசூர் தாலை பயன்படுத்தலாம். மேலும் இதில் நார்ச்சத்துக்களும், புரதச்சத்துக்களும் அடங்கியுள்ளது. தென்னிந்தியாவில் பரவலாக செய்யப்படும் உணவான தோசையில் நீங்கள் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள். இந்த மசூர் தால் தோசையை செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
• பச்சரிசி – ஒரு கப்
• மசூர் தால் – 2 கப் (மசூர் தால் என்பது கேசரி பருப்பு என்று தமிழில் அழைக்கப்படுகிறது. பருப்பைப்போலவே இருக்கும். ஆனால் இதன் நிறம் அழகிய ஆரஞ்சாக இருக்கும்)
• எண்ணெய் – தேவையான அளவு
• உப்பு – தேவையான அளவு
• வெந்தயம் – ஒரு ஸ்பூன்
செய்முறை
1. அரிசி, மசூர் தால் மற்றும் வெந்தயம் என அனைத்தையும் நன்றாக அலசிவிட்டு, 3 முதல் 4 மணி நேரங்கள் ஊறவைக்கவேண்டும்.
2. ஊறிய அரிசி மற்றும் வெந்தயத்தை சேர்த்து கிரைண்டர் அல்லது மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். அடுத்து மசூர் தாலை அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். இரண்டையும் தனித்தனியாக நல்ல மிருதுவாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
3. இரண்டு மாவையும் கலந்துகொள்ளவேண்டும். இரண்டும் சேர்ந்த திக்கான பேஸ்ட்டாக அது இருக்கவேண்டும்.
4. இந்தக் கலவையை ஓரிரவு புளிக்கவைக்கவேண்டும். அது நன்றாக பொங்கி வரவேண்டும்.
5. அடுத்த நாள் காலையில் தோசைக்கல்லை சூடாக்கி, அதில் ஒரு கரண்டி மாவை எடுத்து வட்டமாக பரப்பி, இருபுறமும் பொன்னிறமாகவும், நல்ல முறுகலாகவும் வார்த்து எடுக்கவேண்டும். இதில் வெங்காயத்தை நறுக்கிப்போட்டு அலங்கரிக்கலாம். இது சூப்பர் சுவையானதாக இருக்கும்.
இதற்கு சட்னி, சாம்பார், கிரேவி, வெஜ் அல்லது நான் வெஜ் குருமாக்கள் என அனைத்தும் ஏற்றதுதான்.
இந்த தோசை வித்யாசமான சுவைத்தரும். வழக்கமாக உளுந்து மாவில் மட்டுமே தோசை சாப்பிட்டவர்களுக்கு இது வித்யாசமான சுவையைத்தரும். இந்த தோசையை ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒரு சிலரின் உடலை உளுந்து ஏற்காது. அவர்களுக்கு இந்த தோசை சிறந்த தேர்வாகும். எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

டாபிக்ஸ்