Kulambu Masala : 100 வகை சைவ, அசைவ குழம்புகள் வைக்கலாம்! இப்படி ஒரு பக்குவத்தில், இந்த ஒரு மசாலா பொடி மட்டும் போதும்!
Kulambu Masala : 100 வகை சைவ, அசைவ குழம்புகள் வைக்கலாம் ஒரே பொடியில் என்றால் ஆச்சர்யமாக உள்ளதா? இப்படி ஒரு பக்குவத்தில், இந்த ஒரு மசாலா பொடி மட்டும் செய்துவைத்துக்கொள்ளுங்கள்.

சைவம் மற்றும் அசைவத்தில் 100 வகை குழம்பு வைக்கலாம். இது குழம்புக்கு நல்ல சுவையைக்கொடுக்கும். இப்படி ஒரு குழம்பு மிளகாய்ப் பொடி செய்து வைத்துக்கொண்டால் ஓராண்டு வரை கூட முறையான பக்குவத்தில் சேமித்து வைத்துக்கொள்ளளலாம். கடையில் இனி குழம்பு மிளகாய்ப் பொடி வாங்க தேவையில்லை.
தேவையான பொருட்கள்
சிவப்பு மிளகாய் – ஒரு கிலோ
நாட்டு வரமல்லி – ஒன்னே கால் கிலோ
சீரகம் – 100 கிராம்
சோம்பு – 100 கிராம்
மிளகு – 75 கிராம்
துவரம் பருப்பு – 150 கிராம்
(குழம்புக்கு சுவையும் கெட்டித்தன்மையும் கிடைக்கும்)
கடலை பருப்பு – 100 கிராம்
(இது அதிகமானால் குழம்பு அடிபிடிக்கத் துவங்கிவிடும்)
விரலி மஞ்சள் – 125 கிராம்
அரிசி – 100 கிராம்
(சாப்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் பொன்னி அரிசி எடுக்கவேண்டும்)
கறிவேப்பிலை – இரண்டு கைப்பிடியளவு
செய்முறை
கனமான கடாயை சூடாக்கி மிளகாய், வரமல்லி, மஞ்சள் தவிர ஒவ்வொரு பொருளையும் தனித்தனியாக சேர்த்து வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும்.
இவையனைத்தையும் வறுத்து ஒரு பெரிய தட்டில் கொட்டி வைத்துவிடவேண்டும்.
பொடிக்கு அரைக்க தேர்ந்தெடுக்கும் அனைத்து பொருட்களும், புதியதாக வாங்கி செய்ய வேண்டும்.
அடுப்பை குறைவான தீயில் வைத்து வறுக்கவேண்டும். மிளகு குழம்புக்கு காரத்தன்மை மற்றும் சுவை இரண்டையும் கொடுக்கும்.
விரலி மஞ்சள் நீளமாக இருக்கும். அதை நன்றாக உரலில் சேர்த்த தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
வறுத்த பொருட்கள், மல்லி, மிளகாய் மற்றும் தட்டி எடுத்த மஞ்சள் என அனைத்தையும் நன்றாக காயவைத்துக்கொள்ள வேண்டும்.
வெயிலில் 5 மணி நேரம் நன்றாக காயவைத்துக்கொள்ளவேண்டும். மிளகாய், கறிவேப்பிலையை எல்லாம் கைகளில் நுணுக்கி பார்க்கும்போது நல்ல மொறுமொறுவென வரவேண்டும்.
இந்த பதத்தில் வைத்துக்கொண்டால் போதும் அனைத்தையும் மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளலாம்.
சுவையான குழம்பு மிளகாய் தூள் தயார்.
குறிப்புகள்
இந்த மசாலாவை அரைக்கம் முன் நன்றாக அனைத்தையும் சேர்த்து இடித்துக்கொள்ள வேண்டும். இடித்துவிட்டு அரைக்கும்போது அது நல்ல சுவையைத் தரும்.
அரைத்து நன்றாக கொட்டி ஆறவைத்து ஒரு பெரிய வாலி அல்லது பாத்திரத்தில் சேர்த்து மூடிவைத்துக்கொள்ள வேண்டும்.
அவ்வப்போது தேவையான அளவை ஒரு சிறிய டப்பாவில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
இந்த பெரிய டப்பாவில் அடைத்து வைத்துள்ள மசாலாவை அடிக்கடி திறக்கக்கூடாது. அவ்வாறு திறந்து பார்த்தால், அதன் மணம் குறைந்துவிடும். எனவே சிறிய டப்பாவில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் வைக்கும் அனைத்து வகை குழம்புகளிலும் இதை சேர்த்துக்கொள்ள முடியும். சைவ குழம்பைவிட அசைவ குழம்பில் கொஞ்சம் குறைவாக சேர்க்கவேண்டும்.
அனைத்து காய்கறி வறுவல், பொரியல் என இந்தப்பொடியை பயன்படுத்தி அனைத்தும் செய்து கொள்ளலாம். இந்த ஒரு பொடியை மட்டும் அரைத்து வைத்துக்கொண்டால் போதும் ரசத்துக்கு ஒரு பொடி தயாரித்து வைத்துக்கொண்டால் போதும். நீங்கள் சாம்பார், ரசம், பொரியல், வறுவல் அல்லது மட்டன், சிக்கன் குழம்பு, மீன் வறுவல், சிக்கன் வறுவல், மட்டன் வறுவல் என அனைத்தும் செய்து மதிய உணவை எளிதாக முடித்துவிடலாம். அது மிகவும் சிறப்பானதாகவும் இருக்கும்.

டாபிக்ஸ்