கர்நாடகா ஸ்பெஷல் தக்காளி பாத்; காரசாரமாக, நாவின் சுவை அரும்புகளுக்கு விருந்து! இதோ ரெசிபி!
கர்நாடகா ஸ்பெஷல் தக்காளி பாத் செய்வது எப்படி என்று பாருங்கள்.
தக்காளியில் உங்கள் உடலுக்கு தேவையான அளவு பீட்டா கரோட்டின்கள், லைக்கோபென்கள், வைட்டமின் சி சத்துக்கள் உள்ளது. இவையனைத்தும் செல்களின் சேதத்தை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆகும். தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதய நோய்கள், டைப் 2 நீரிழிவு நோய்கள் மற்றும் நரம்பியல் கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. தக்காளி அதன் பன்முக குணங்களுக்காக சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பச்சை, மஞ்சள், சிவப்பு என அனைத்து நிறங்களிலும் உள்ளது. இதன் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள். நோய் எதிர்ப்பாற்றலை அகிகரிக்கிறது. புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது. இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது. மலச்சிக்கலைத் தடுக்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. வளர்சிதை மாற்ற நோய்க்குறியை தடுக்கின்றன. மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. உடற்பயிற்சியில் இழக்கும் ஆற்றலை மீட்கிறது. தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவுகளை தெரிந்துகொள்ளுங்கள். ஒரு தக்காளியில் கலோரிகள் 22.5, கொழுப்பு 0.25 கிராம்கள், சோடியம் 6.25 மில்லி கிராம்கள், கார்போஹைட்ரேட்கள் 4.86 கிராம்கள், நார்ச்சத்துக்கள் 1.5 கிராம்கள், 0 சர்க்கரை, புரதச்சத்துக்கள் 1.1 கிராம் உள்ளது.
இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கொண்ட தக்காளியில் இருந்து நாம் எண்ணற்று உணவுகளை தயாரிக்க முடியும். இது அன்றாட பயன்பாட்டில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தக்காளியைப் பயன்படுத்தி தற்போது கர்நாடகா ஸ்பெஷல் தக்காளி பாத் செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
அரிசி – ஒரு கப்
(அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்)
நெய் – ஒரு ஸ்பூன்
எண்ணெய் – ஒரு ஸ்பூன்
பிரியாணி இலை – 1
பட்டை – 1
கிராம்பு – 2
ஸ்டார் சோம்பு – 1
ஏலக்காய் – 1
பெரிய வெங்காயம் – 1 (நீளவாக்கில் நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பச்சை பட்டாணி – ஒரு கப்
பச்சை மிளகாய் - 1
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
கரம் மசாலா – ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஊறவைத்து அரைக்க தேவையான பொருட்கள்
தக்காளி – 2
பூண்டு – 4 பல்
வர மிளகாய் – 2
(இதை மட்டும் சூடான தண்ணீரில் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைத்துவிடவேண்டும். பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல மையாக அரைத்துக்கொள்ளவேண்டும்)
மல்லித்தழை – சிறிது
செய்முறை
முதலில் ஒரு குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஸ்டார் சோம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவேண்டும். அடுத்து பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். பச்சை பட்டாணியையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அடுத்து தக்காளி சேர்த்து வதங்கியவுடன், கறிவேப்பிலை இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவேண்டும்.
அடுத்து அரைத்த விழுது மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். இவையனைதுதும் பச்சை வாசம் போனவுடன், ஊறவைத்த அரிசியைச் சேர்த்து நன்றாக கிளறி, இரண்டே கால் கப் தண்ணீர் சேர்த்து, 4 விசில் விட்டு எடுத்தால் சூப்பர் சுவையான கர்நாடகா ஸ்பெஷல் தக்காளி பாத் தயார். மல்லித்தழை தூவி இறக்கினால் மணம் ஊரையே கூட்டும். சுவையிலும் தெறிக்கவிடும். இதற்கு தொட்டுக்கொள்ள தயிர் பச்சடி போதுமானது.
இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள். உங்களுக்கு இந்த ரெசிபி கட்டாயம் பிடிக்கும். எனவே ஒருமுறை கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்