இந்த ஒரு தாளிப்பு வடகம் மட்டும் செய்து வைத்துக்கொள்ளுங்கள்; உங்கள் சமையல் ஊரே மணக்கும்!
தாளிப்பு வடகம் செய்வது எப்படி?
தாளிப்பு வடகம், இது நமது பாட்டிகள் காலம் முதல் நம் பழக்கத்தில் உள்ள ஒன்றாகும். இந்த தாளிப்பு வடகத்தை வெயில் காலத்தில் தயாரித்து வைத்துக்கொள்வார்கள். இது ஓராண்டு கூட கெடாமல் இருக்கும். இந்த தாளிப்பு வடகம் செய்வது மிகவும் கடினமான வேலைதான். ஆனால் சில நாட்கள் கஷ்டப்பட்டு செய்து வைத்துவிட்டால், எப்போதும் சுவையான உணவு சாப்பிடலாம். இதை சாம்பார், ரசம், புளிக்குழம்பு என எதைவேண்டுமானாலும் தாளிக்கப் பயன்படுத்தலாம். இந்த வடகத்தில் துவையல் கூட அரைத்து சாப்பிடலாம். இந்த வடகத்தில் சேர்க்கப்படும் பொருட்கள் அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்த, நாம் சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள்தான். எனவே உங்கள் உடலுக்கும் நல்லது. இந்த தயாரிப்பு முறை பல தலைமுறைகள் கடந்து செய்யப்பட்டு வருகிறது. மிக்ஸி, கிரைண்டர் இல்லாத காலத்தில் கைகளால் அரைத்து செய்வார்கள். இப்போது மிக்ஸி மற்றும் கிரைண்டர் வந்துவிட்டதால், இதை செய்வது இப்போது எளிதாகிவிட்டது.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – கால் கிலோ
உளுந்து – 4 டேபிள் ஸ்பூன்
கடுகு – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கட்டி பெருங்காயம் – 1 சிறிய கட்டி
கறிவேப்பிலை – கைப்பிடியளவு
மல்லித்தழை – கைப்பிடியளவு
விளக்கெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
பூண்டு – 10 பல் (தோலுடன் தட்டி வைத்துக்கொள்ளவேண்டும்)
வரமிளகாய் – 5 (தட்டிக்கொள்ளவேண்டும்)
செய்முறை
தோல் உரித்த வெங்காயத்தை ஒன்றிரண்டாக மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். முழுவதும் அரைத்து விடக்கூடாது. திப்பிதிப்பியாக அரைத்து எடுக்கவேண்டும். உளுந்தை 10 நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ளவேண்டும். வடித்து, உரலில் போட்டு சீரகம் மற்றும் உளுந்து இரண்டையும் தட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.
இப்போது அரைத்த் வெங்காயத்தில் தட்டிய உளுந்து, சீரகம், பூண்டு, வரமிளகாய் சேர்த்து பிரட்டவேண்டும். அடுத்து கறிவேப்பிலை, மல்லித்தழை, உப்பு, பெருங்காயத்தை உடைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அதையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். மஞ்சள் தூள், கடுகு, வெந்தயம் என அனைத்தையும் சேர்த்து, விளக்ணெய் ஊற்றி நன்றாக கலந்துகொள்ளவேண்டும்.
இதை அப்படியே ஒரு தட்டில் பரப்பி வெயிலில் உலர்த்தவேண்டும். அடுத்த நாள் எடுத்து, கைகளில் விளக்கெண்ணெய் தடவி உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவேண்டும். இதை 15 நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். தினமும் காலையும், மாலையும் உருண்டைகளை விளக்கெண்ணெய் தடவி பிடித்து வைக்கவேண்டும்.
அப்போதுதான் உருண்டைகள் உதிராமல் ஒட்டியிருக்கும். சில நேரங்களில் காய்ந் உருண்டைகள் உடைந்து வரும். அவற்றை மீண்டும், மீண்டும் எண்ணெய் தடவி உருண்டையாக்கும்போது, அது உதிராமல் இருக்கும். இந்த உருண்டைகள் நன்றாக ஈரப்பதம் போய் காய்ந்தவுடன் அவற்றை எடுத்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
இதை நீங்கள் எந்த குழம்பு செய்தாலும், அதை தாளிக்கப் பயன்படுத்தவேண்டும். புளிக்குழம்பு, சாம்பார், ரசம், காரக்குழம்பு, மீன் குழம்பு போன்றவற்றை இந்த தாளிப்பு வடகத்தில் தாளிக்கும்போது, அதன் சுவையும் அள்ளும்.
அதன் மணமும் வீடு முழுக்க நிறையும். விரைவில் காய வேண்டுமெனில் வடைகளாக தட்டி காய வைத்துக்கொள்ளலாம். விரைவில் காய்ந்துவிடும். ஆனால் நீண்ட நாட்கள் காயும்போது நல்லது. எனவே உருண்டைதான் சிறந்தது.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்