HT Tamil Book SPL: இரு எழுத்தாளுமைகள் பரிமாறிக் கொண்ட கடிதங்களின் தொகுப்பு நூல்!
HT Tamil Book SPL: இருவரும் பரஸ்பரம் தங்கள் குடும்பத்தை பற்றி வினவிக் கொள்வது, அன்புடன் நலம் விசாரித்துக் கொள்வது என்பது மட்டுமல்லாமல், தங்கள் எழுத்துப் படைப்புகள் குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்வதையும் கடிதங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.

தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத முன்னோடி எழுத்தாளர்களான கு.அழகிரிசாமி, சுந்தர ராமசாமி ஆகியோர் பரஸ்பரம் சிறந்த நண்பர்களாக இருந்தனர். அப்போதெல்லாம் தபால் வழி மூலமாகவே தகவல்தொடர்பு இருந்தது. இவர்கள் இருவரும் பரஸ்பரம் எழுதிக் கொண்ட கடிதங்கள் அனைத்தையும் தொகுத்து ‘இதம் தந்த வரிகள்’ என்ற நூலாக வெளியிட்டுள்ளது காலச்சுவடு பதிப்பகம். இந்நூல் குறித்து பார்ப்போம். கடிதப்போக்குவரத்து என்பது ஏறக்குறைய அருகிப் போய்விட்ட இந்நாளில் இந்நூல் படிப்பது வித்தியாசமான அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும்.
கோவில்பட்டிக்கு அருகிலுள்ள இடைச்செவல் கிராமத்தில் பிறந்தவர் எழுத்தாளர் கு.அழகிரிசாமி. எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் பால்ய நண்பர். எஸ்.எஸ்.எல்.சி முடித்து ஆசிரியராகவும் பின்னர் பதிவாளர் அலுவலகத்தில் எழுத்தராகவும் பணியாற்றினார். பின்னர் பத்திரிகையாளராகி தமிழ் மணி, சக்தி மற்றும் பிரசண்ட விகடன் போன்ற தமிழ் இதழ்களில் எழுதினார். 1953 ஆம் ஆண்டு, தமிழ் நேசனில் வேலை செய்ய மலேசியா சென்றார். 1955 ஆம் ஆண்டு சீதாலட்சுமி என்பவரை மணந்தார்.
1967 ஆம் ஆண்டில், தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை அவரது 'கவிச்சக்கரவர்த்தி' நாடகத்திற்கு பரிசு வழங்கியது. அன்பளிப்பு என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக அவருக்கு மரணத்திற்குப் பின் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. சிறுகதைக்காக பிரதானமாக அறியப்படும் இவர், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, நாடகம், கவிதை, நாவல் ஆகியவற்றையும் படைத்துள்ளார்.
கு.அழகிரிசாமி குறித்து சுந்தர ராமசாமி
‘அழகிரிசாமி, கு.ப.ரா.வின் வலிமையான வாரிசு. மனித இயல்பைப் புதுமைப்பித்தனைப் போல் ஒரு சிடுக்காகக் காணாமல் அமைப்பின்மீது அதிகக் குறைகளைக் கண்டவர். ஆட்டிக் குலைக்கும் வாழ்விலும் மனித ஜீவன்கள் தக்க வைத்துக் கொண்டிருக்கும் மேன்மைகள் இவரைப் புல்லரிக்கச் செய்கின்றன. கு.ப.ரா.வைப் போல் எளிமையான சாயல்களும், மென்மையான குரலும் மிகுந்த சிறுகதைப் பிரக்ஞையும் கொண்டவர்’ என இவரைப் பற்றி பிரபல எழுத்தாளர் சுந்த ராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
சுந்தர ராமசாமி
தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான இவர், நாகர்கோவிலில் பிறந்தார். பள்ளியில் மலையாளமும், ஆங்கிலமும் சமஸ்கிருதமும் கற்றார். 1951இல் 'தோட்டியின் மகன்' எனும் நூலை தமிழில் மொழிபெயர்த்தார். 1951இல் புதுமைப்பித்தன் நினைவு மலரை வெளியிட்டார். இவரது முதல் கதையான முதலும் முடிவும் அதில் இடம்பெற்றது. 3 நாவல்களும், பல கட்டுரைகளும் 60 சிறுகதைகளும் பசுவய்யா என்ற பெயரில் கவிதைகளும் எழுதியுள்ளார். 1988 இல் காலச்சுவடு இதழை நிறுவினார்.
சுந்தர ராமசாமிக்கு டொரொன்டோ பல்கலைக்கழகம் வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான இயல் விருதை வழங்கி கவுரவித்தது. இலக்கியப் பணிக்காக ‘கதா சூடாமணி' விருதையும் பெற்றார். 2005ம் ஆண்டில் அமெரிக்காவில் காலமானார்.
இப்படிப்பட்ட இரு இலக்கிய ஆளுமைகளின் கடிதங்கள் எப்படி இருக்கும் என்று யூகித்திருப்பீர்கள் என்று அறிகிறேன். இருவரும் பரஸ்பரம் தங்கள் குடும்பத்தை பற்றி வினவிக் கொள்வது, அன்புடன் நலம் விசாரித்துக் கொள்வது என்பது மட்டுமல்லாமல், தங்கள் எழுத்துப் படைப்புகள் குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்வதையும் கடிதங்கள் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. இவர்கள் இருவரையும் மிகவும் நேசிக்கும் வாசகர்களுக்கு இந்நூல் நிச்சயம் பிடிக்கும். மொத்தம் 103 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை ரூ.130.
இந்நூலை படித்து முடிக்கும்போது நமது சொந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் கடிதம் எழுதினால் என்ன என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்