புதுச்சேரி காலை உணவு தயிர் இட்லி சாப்பிட்டு இருக்கீங்களா? புதுசா ஒரு பிரேக்பாஸ்ட் ரெசிபிக்கு சூப்பர் சாய்ஸ்!
நாம் அன்றாடம் சாப்பிடும் காலை உணவுகளில் புது விதமான முறைகளை முயற்சி செய்து பார்த்தால் வீட்டில் உள்ளவர்கள் அதனை விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு இது போல புது புது உணவுகளை செய்து கொடுப்பது அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும். அதில் வழக்கமான இட்லிக்கு பதிலாக தயிர் இட்லி செய்து கொடுங்கள்.

புதுச்சேரிக்கு சுற்றுலா சென்று வந்தால் அங்கு இருக்கும் பாரம்பரிய உணவுகளை நம்மால் எளிதாக மறக்க முடியாது. அந்த உணவுகள் தனித்துவமான சுவையில் இருக்கும். இதுவே இதற்கு முக்கியமான காரணம் ஆகும். புதுச்சேரியில் இருக்கும் காலை உணவுகளில் ஒன்று தான் தயிர் இட்லி, இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையான உணவாக கருதப்படுகிறது. இது நாம் வழக்கமாக சாப்பிடும் இட்லியில் இருந்து செய்யப்படுகிறது. உங்கள் வீட்டில் உள்ளவர்கள் காலை உணவிற்கு புது விதமான உணவுகளை கேட்டால் இந்த தயிர் இட்லியை முயற்சி செய்து பாருங்கள். வீட்டிலேயே தயிர் இட்லி செய்வது எப்படி என இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
2 கப் இட்லி மாவு
3 டீஸ்பூன் புளிக்காத புது தயிர்
3 டீஸ்பூன் ஓமப்பொடி
அரை டீஸ்பூன் மிளகாய்தூள்
தேவையான அளவு உப்பு
ஒரு கொத்து மல்லித்தழை
அரைக்க தேவையான பொருட்கள்
3 டீஸ்பூன் துருவிய தேங்காய்
4 பச்சை மிளகாய்
6 முதல் 8 முந்திரிப்பருப்பு
அரை டீஸ்பூன் கடுகு
அரை டீஸ்பூன் உளுந்த பருப்பு
அரை டீஸ்பூன் பெருங்காயத் தூள்
2 டீஸ்பூன் எண்ணெய்
செய்முறை
தயிர் இட்லி செய்வதற்கு வழக்கமாக இட்லிக்கு மாவு அரைப்பது போல அரிசி மற்றும் உளுத்தம் பருப்பு ஊற வைத்து அரைத்து எடுக்கவும். இதில் சிறிதளவு வெந்தயம் சேர்த்தல் இட்லி நன்றாக வரும். கடைகளில் வாங்கும் மாவினை கூட பயன்படுத்தலாம். பின்னர் இந்த மாவைக் கொண்டு சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய் மற்றும் முந்திரி பருப்பு ஆகியவற்றை போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த கலவையை தயிருடன் கலந்துகொள்ளுங்கள். அத்துடன் கடுகு, பெருங்காயம் ஆகியவற்றை தாளித்து சேர்க்கவும். மேலும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு கலந்துகொள்ளுங்கள்.
இப்பொழுது கிண்ணங்களில் இட்லிகளை வைத்து, கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி மல்லித்தழை, ஓமப்பொடி, மிளகாய்தூள், சீரகத்தூள் துவி பரிமாறலாம். அல்லது வெறும் மல்லித்தழையை மட்டும் தூவியும் பரிமாறலாம். இந்த இட்லிக்கு உப்பு காரம் சற்று தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும்.இப்போது சுவையான தயிர் இட்லி தயார். இதனை வெறுமென சாப்பிடலாம். சட்னி சாம்பார் தேவையில்லை. நீங்களும் இதனை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். வீட்டில் உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இந்த தயிர் இட்லியை மிகவும் விரும்பி வழக்கத்தை விட அதிக இட்லி சாப்பிடவும் வாய்ப்புண்டு.

டாபிக்ஸ்