Ghee Fish Masala: காரசாரமான நெய் மீன் மசாலா செய்யனுமா! இதோ சூப்பரான ரெசிபி!
Ghee Fish Masala: நெய்மீன், ராஜாமீன், சீர்மீன் மற்றும் ராஜா கானாங்கெளுத்தி என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த மீன் 50 கிலோ வரை எடை இருக்கும். மற்ற மீன்களை இது உணவாக உண்டு வழும் மீனாகும்.

தினமும் உணவில் சத்தான பொருட்களை சேர்த்துக் கொள்வது நமக்கு நன்மை பயக்கும். அதிலும் அசைவ உணவுகளை நாம் ருசிக்காக சாப்பிடுகிறோம். ஆனால் அந்த அசைவ உணவுகளில் பல சத்துக்கள் அடங்கியுள்ளன. புரோட்டினின் பெரும் ஆதாரமாக இந்த அசைவ உணவுகள் இருக்கின்றன. அதிலும் கடல் உணவுகள் என்றால் கூறவே வேண்டாம். அதில் பல நற்பயன் அளிக்கும் சத்துக்கள் உள்ளன. கடல் மீன்களில் ஒன்றான நெய் மீன் குறித்து கேள்விபட்டிருக்கிறீர்களா? அது மிகவும் சுவையான மீன்களில் ஒன்றாகும்.
நெய்மீன், ராஜாமீன், சீர்மீன் மற்றும் ராஜா கானாங்கெளுத்தி என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த மீன் 50 கிலோ வரை எடை இருக்கும். மற்ற மீன்களை இது உணவாக உண்டு வழும் மீனாகும். இது ஹிஸ்டோன் நஞ்சிற்கு மிகவும் பெயர்போனதாகும். ஒமேகா 3 கொழுப்பு அமிலத்துடன் உள்ள இம்மீன் சுவையாக இருக்கும். இந்த சுவையான மீன் வைத்து சூப்பரான வறுவல் செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருள்கள்
அரை கிலோ நெய் மீன்
4 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
2 டீஸ்பூன் சோளமாவு
சிறிதளவு வெங்காயத் தாள்
2 டீஸ்பூன் கரம் மசாலா
2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
சிறிய அளவிலான இஞ்சி துண்டு
6 பல் பூண்டு
1 குடை மிளகாய்
2 பெரிய வெங்காயம்
4 டீஸ்பூன் தக்காளி சாஸ்
1 முட்டை
தேவையான அளவு உப்பு
தேவையான அளவு எண்ணெய்
செய்முறை
முதலில் நெய் மீனை நன்கு சுத்தம் செய்யவும். மீனை சுத்தம் செய்த பின்னர் உப்பு, எலுமிச்சைச் சாறு, சோள மாவு, முட்டை ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு வெங்காயம், குடை மிளகாய் ஆகிய இவற்றை சதுரம், சதுரமாக வெட்டி வைத்துக் கொள்ளவும். அதே போல பூண்டையும், இஞ்சியையும் கூட பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்துத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதனை நன்கு காய வைக்கவும். எண்ணெய் நன்கு காய்ந்த மாத்திரத்தில் மீன் துண்டுகளை அதில் போட்டு நன்கு பொரித்தெடுக்கவும்.
இப்போது மற்றொரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் வெங்காயம், குடை மிளகாய் ஆகிய இவை இரண்டையும் நன்கு வதக்க வேண்டும். இவற்றுடன் இஞ்சி, பூண்டு, மிளகாய்த் தூள், உப்பு ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர், தக்காளி சாஸ் ஆகிய இவற்றையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். கலவை சற்றே கெட்டியாகும் சமயத்தில் கரம் மசாலா, பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத் தாள், பொரித்து வைத்த மீன் துண்டுகள் ஆகியவற்றை மசாலாவில் போடவும். குறிப்பாக மீன் துண்டுகளை மசாலாவில் நன்கு புரட்ட வேண்டும். அப்போது தான் சுவையாக இருக்கும். இதோ சுவையான நெய் மீன் மசாலா தயார். மீனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால், எந்த வியாதிகளும் நம்மை அண்டாது என்பது மருத்துவர்களின் விளக்கம்.

டாபிக்ஸ்