Sweet Pongal : ‘பொங்கலோ பொங்கல்’ தித்தித்திக்கும் சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி? இதோ பதமும், ரெசிபியும்!
பொங்கலுக்கு தித்திக்கும் சர்க்கரைப் பொங்கல் செய்வது எப்படி?

தைப்பொங்கல் என்பது தமிழர்களின் அறுவடை திருவிழாவாகும். இது தமிழர்களால் நான்கு நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இது தமிழ் மாதமான தையில் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை சூரியனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இது வட இந்தியாவில் மகர சங்கராந்தியாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் இந்தப் பண்டிகை பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை போகியுடன் துவங்குகிறது. போகியன்று மக்கள் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதன் அடிப்படையில் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிக்கிறார்கள். அடுத்த நாள் தை முதல் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் தேடி விதை என்பதற்கு ஏற்ப, ஆடி மாதம் விதைத்த நெல் தை மாதத்தில் அறுவடைக்கும் வந்துவிடும். அந்த புதுநெல்லைப் போட்டு பொங்கலிடுகிறார்கள். அந்தப் பொங்கலை உழவுத்தொழிலுக்கு துணை நின்ற சூரியனுக்கும், இயற்கைக்கும் படையிலிட்டு வணங்குகிறார்கள். அடுத்த நாள் மாட்டுப்பொங்கல், அன்றைய தினம் உழவுத் தொழிலுக்கு உதவி செய்த கால்நடைகளுக்கு குறிப்பாக மாடுகளை குளிப்பாட்டி, அவற்றை அலங்கரித்து, அவற்றுக்கு பொங்கலிட்டு, ஊட்டி மகிழ்கிறார்கள். அடுத்த நாள் காணும் பொங்கல், இந்த நாளில் மக்கள் பல்வேறு சுற்றுலா தலங்களும் சென்று புதிய இடங்களைக் கண்டு மகிழ்கிறார்கள். இதனால் இந்த நான்கு நாட்களும் உழைத்து, களைத்த தமிழர்கள் கொண்டாடி மகிழ்கிறார். தமிழ்நாட்டின் முக்கிய பண்டிகையான பொங்கல் நான்கு நாட்கள் நிறைவுடனும் மகிழ்வுடனும் இவ்வாறு கொண்டாடப்படுகிறது.
சூரிய பகவான் வடக்கு நோக்கிய தனது பயணத்தை துவக்கும் நாளில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அது உத்ரநாராயணா என்று அழைக்கப்படுகிறது. அன்று மகர ராசியில் சூரியன் நுழைகிறார். பின்னர் பொங்கல் என்று வந்தது. அதற்கு பொங்குதல் மற்றும் வேகவைப்பது என்று பொருள். அன்று பொங்கல் என்ற உணவு சமைக்கப்படுவதால் அப்படி அழைக்கப்படுகிறது. பொங்கல் அன்று சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண் பொங்கல் தயாரிக்கப்படுகிறது. மேலும் அன்று வாசலில் கோலங்கள் போட்டு வர்ணிக்கப்படுகிறது. வீடுகளை சுத்தம் செய்து மாவிலை தோரணங்கள் கட்டி மக்கள் அலங்கரிக்கிறார்கள். பொதுவாக பொங்கல் என்றால் பால் பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் என்ற இரண்டு வகை பொங்கல்தான் வைக்கப்படும். குறிப்பாக சர்க்கரை பொங்கல் என்பது மிகவும் சுவையாக செய்வது எப்படி என்று பாருங்கள்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி – ஒரு கப்
பாசிபருப்பு – ஒரு கப்
(பாசி பருப்பு அதே அளவில் சேர்க்கும்போது பொங்கல் மிகுந்த சுவையானதாக இருக்கும் அல்லது பாதியும் சேர்த்துக்கொள்ளலாம்)
வெல்லம் – 2 கப்
நெய் – அரை கப்
முந்திரி – ஒரு கைப்பிடியளவு
திராட்சை – ஒரு கைப்பிடியளவு
பால் – அரை லிட்டர்
ஏலக்காய் – ஒரு சிட்டிகை
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்கவைத்துக்கொள்ளவேண்டும். தண்ணீர் கொஞ்சம்போல் சேர்த்தால் போதும். பால் நன்றாக பொங்கி கொதிக்கும்போது அரை மணி நேரம் ஊறவைத்த பச்சரிசி மற்றும் பாசிபருப்பை சேர்க்கவேண்டும்.
இதற்கு முன்னர் பாசிபருப்பை நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும். அடுத்து பச்சரிசியையும் சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும். இரண்டும் ஓரளவுக்கு வறுபட்டால் போதும். நிறம் மாறக்கூடாது. அந்த பச்சைத் தன்மை மட்டும் போனால் போதும். வறுத்தபின், ஆறவைத்து அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
பாலும், அரிசி மற்றும் பருப்பு இரண்டும் நன்றாக வேகவேண்டும். வெந்தவுடன், ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதை பாகாக்க வேண்டும். பாகுபதம் தேவையில்லை. வெல்லம் கரைந்தால் போதும். வெல்லம் கரைந்தவுடன் வடிகட்டிக்கொள்ளவேண்டும்.
அதை வெந்துகொண்டிருக்கும் பொங்கலில் சேர்க்கவேண்டும். ஒரு தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து முந்திரி மற்றும் திராட்சையை வறுத்துக் வெந்து வரும் பொங்கலில்சேர்க்கவேண்டும். இறுதியாக ஏலக்காய் தூவி இறக்கவேண்டும்.
சர்க்கரைப் பொங்கல் ஆறஆற கெட்டியாகும் தன்மை கொண்டது. எனவே கொஞ்சம் தளர்வாகவே இறக்கவேண்டும். தளர்வாக இறக்கினால் ஆறும்போது அது நன்றாக இருக்கும். சூடாக இறக்கியவுடனே எஞ்சிய நெய்யை ஊற்றிவிடவேண்டும். பாசிபருப்பும், கடலை பருப்பும் கலந்தும் எடுத்துக்கொள்ளலாம்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்