Country Chicken: கம கம கமக்கும் நாட்டுக்கோழி குழம்பு செய்வது எப்படி?விடுமுறை நாளில் செய்ய ஈசியான ரெசிபி!
Country Chicken: அசைவ உணவுகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக நாட்டுக்கோழி குழம்பு வகை உள்ளது. இதில் மிளகு போட்டு சாப்பிட்டால் போதும் சுவை அருமையாக இருக்கும். சுவையான நாட்டுக்கோழி குழம்பு வைப்பது எப்படி என்பதை இங்கு காண்போம்.

தென் தமிழகத்தில் கானும் பொங்கல் நாளில் அசைவ உணவுகள் சமைப்பது வழக்கமான ஒன்றாகும். அதுவும் படையல் உணவு வகைகளில் கட்டாய உணவாக அசைவ உணவுகள் இடம் பெறுகின்றன. குறிப்பாக இது குளிர்காலம் என்பதால் உடலில் ஏற்படும் சிறு பிரச்சனைகளையும் சரிப்படுத்த அசைவ உணவுகள் உதவும். அசைவ உணவுகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக நாட்டுக்கோழி குழம்பு வகை உள்ளது. இதில் மிளகு போட்டு சாப்பிட்டால் போதும் சுவை அருமையாக இருக்கும். சுவையான நாட்டுக்கோழி குழம்பு வைப்பது எப்படி என்பதை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
அரை கிலோ நாட்டுக்கோழி கறி
2 தக்காளி
2 பச்சை மிளகாய்
அரை கப் தயிர்
2 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
சிறிதளவு கொத்தமல்லித்தழை
1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
அரை டீஸ்பூன் மஞ்சள்தூள்
தேவையான அளவு உப்பு
5 முதல் 6 வற மிளகாய்
2 டீஸ்பூன் மல்லி
2 டீஸ்பூன் சீரகம்
2 டீஸ்பூன் மிளகு
மசாலா வறுத்து அரைக்க
அரை கப் துருவிய தேங்காய்
4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
சிறிய துண்டு பட்டை
2 முதல் 4 கிராம்பு
ஒரு பெரிய வெங்காயம்
சிறிதளவு கறிவேப்பிலை
செய்முறை
முதலில் கோழி துண்டுகளை உப்பு மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து நன்கு சுத்தப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தக்காளி, வெங்காயம் இரண்டையும் பொடிதாக வெட்டி வைக்கவும். மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். இப்பொழுது அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் வற மிளகாய், கொத்தமல்லி, சீரகம், மிளகு எல்லாவற்றையும் போட்டு கிளறி அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் ஆற விடவும். ஆறிய பிறகு மிக்ஸ்சியில் போட்டு நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் இதில் துருவிய தேங்காயையும் நன்கு வறுத்து மிக்ஸ்சியில் அரைக்கவும். பின்னர் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போடவும். பிறகு கறிவேப்பில்லை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் தயிர், அரைத்து வைத்துள்ள பொடி, கரம் மசாலா தூள், மஞ்சள்தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் உப்பும் கோழித்துண்டுகளையும் சேர்த்து மசாலா எல்லா இடங்களிலும் படும் படி நன்கு கிளறி விடவும். பிறகு அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும். மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் மல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும். சுவையான நாட்டுக்கோழி குழம்பு ரெடி. இதனை உங்கள் வீட்டில் உள்ள அணைவருக்கும் சமைத்து கொடுத்து மகிழுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை தாராளமாக சாப்பிடலாம். இது ஒரு சிறந்த தேர்வாக அமையும்.

டாபிக்ஸ்