Pongal Special : ‘பொங்கலோ பொங்கல்’ கிராமத்தில் செய்யும் பால் பொங்கல் மற்றும் இனிப்பு பொங்கல் ரெசிபி இதோ!
கிராமத்து ஸ்டைல் பால் பொங்கல் மற்றும் இனிப்புப் பொங்கல் செய்வது எப்படி?

தைப்பொங்கல் என்பது தமிழர்களின் அறுவடை திருவிழாவாகும். இது தமிழர்களால் நான்கு நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இது தமிழ் மாதமான தையில் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை சூரியனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இது வட இந்தியாவில் மகர சங்கராந்தியாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதும் இந்தப் பண்டிகை பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை போகியுடன் துவங்குகிறது. போகியன்று மக்கள் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதன் அடிப்படையில் வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிக்கிறார்கள். அடுத்த நாள் தை முதல் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் தேடி விதை என்பதற்கு ஏற்ப, ஆடி மாதம் விதைத்த நெல் தை மாதத்தில் அறுவடைக்கும் வந்துவிடும். அந்த புதுநெல்லைப் போட்டு பொங்கலிடுகிறார்கள். அந்தப் பொங்கலை உழவுத்தொழிலுக்கு துணை நின்ற சூரியனுக்கும், இயற்கைக்கும் படையிலிட்டு வணங்குகிறார்கள். அடுத்த நாள் மாட்டுப்பொங்கல், அன்றைய தினம் உழவுத் தொழிலுக்கு உதவி செய்த கால்நடைகளுக்கு குறிப்பாக மாடுகளை குளிப்பாட்டி, அவற்றை அலங்கரித்து, அவற்றுக்கு பொங்கலிட்டு, ஊட்டி மகிழ்கிறார்கள். அடுத்த நாள் காணும் பொங்கல், இந்த நாளில் மக்கள் பல்வேறு சுற்றுலா தலங்களும் சென்று புதிய இடங்களைக் கண்டு மகிழ்கிறார்கள். இதனால் இந்த நான்கு நாட்களும் உழைத்து, களைத்த தமிழர்கள் கொண்டாடி மகிழ்கிறார். தமிழ்நாட்டின் முக்கிய பண்டிகயான பொங்கல் நான்கு நாட்கள் நிறைவுடனும் மகிழ்வுடனும் இவ்வாறு கொண்டாடப்படுகிறது.
சூரிய பகவான் வடக்கு நோக்கிய தனது பயணத்தை துவக்கும் நாளில் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அது உத்ரநாராயணா என்று அழைக்கப்படுகிறது. அன்று மகர ராசியில் சூரியன் நுழைகிறார். பின்னர் பொங்கல் என்று வந்தது. அதற்கு பொங்குதல் மற்றும் வேகவைப்பது என்று பொருள். அன்று பொங்கல் என்ற உணவு சமைக்கப்படுவதால் அப்படி அழைக்கப்படுகிறது. பொங்கல் அன்று சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண் பொங்கல் தயாரிக்கப்படுகிறது. மேலும் அன்று வாசலில் கோலங்கள் போட்டு வர்ணிக்கப்படுகிறது. வீடுகளை சுத்தம் செய்து மாவிலை தோரணங்கள் கட்டி மக்கள் அலங்கரிக்கிறார்கள். பொதுவாக பொங்கல் என்றால் பால் பொங்கல் மற்றும் சர்க்கரைப் பொங்கல் என்ற இரண்டு வகை பொங்கல்தான் வைக்கப்படும். ஆனால் நீங்கள் இந்த ஆண்டு வித்யாசமாக கருப்பட்டியில் பொங்கல் செய்து பாருங்கள்.
கிராமத்தில் செய்யும் பால் பொங்கல் மற்றும் இனிப்பு பொங்கல் செய்வது எப்படி என்று பாருங்கள்.
பால் பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்
பால் – ஒரு கப்
பச்சரிசி – ஒரு கப்
தேங்காய் துருவல் – கால் கப்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் தண்ணீர் இரண்டும் சேர்த்து மூன்று கப் அளவுக்கு கொதிக்கவிடவேண்டும். அதில் அரை மணி நேரம் ஊறவைத்த பச்சரிசியை சேர்த்துக்கொள்ளவேண்டும். அரிசி நன்றாக வெந்தவுடன், உப்பு மற்றும் தேங்காய் துருவல் தூவி இறக்கவேண்டும். இதுதான் பொங்கல் பண்டிகையன்று கிராமப்புறத்தில் செய்யும் பால் பொங்கல்.
இனிப்பு பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்
பச்சரிசி – ஒரு கப்
பால் – ஒரு கப்
வெல்லம் – ஒரு கப்
நெய் – கால் கப்
முந்திரி – ஒரு கைப்பிடியளவு
திராட்சை – ஒரு கைப்பிடியளவு
ஏலக்காய் – 2
தேங்காய் துருவல் – கால் கப்
உப்பு – சிட்டிகை
செய்முறை
ஒரு பாத்திரத்தில் பால் மற்றும் தண்ணீர் மூன்று கப் அளவு இருக்குமளவுக்கு கலந்து கொதிக்கவிடவேண்டும். அதில் பச்சரிசியை சேர்த்து அது வெந்தவுடன், வெல்லத்தை சேர்க்கவேண்டும். பொங்கல் கெட்டியாகி வரும்போது, நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து கிளறவேண்டும். ஏலக்காய்ப் பொடி, உப்பு மற்றும் நெய்யில் வறுத்த தேங்காய் துருவல் தூவி இறக்கினால், சூப்பர் சுவையான கிராமப்புறத்து இனிப்புப் பொங்கல் தயார்.
இந்த இரண்டு பொங்கலும் கிராமப்புறத்தில் செய்யப்படும் பொங்கல் ஆகும். இன்றும் பொங்கல் நாளில் இதுபோல பால் பொங்கலை வாசலில் வைத்துதான் சூரியனுக்கு படைக்கிறார்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்