Heart Attack: 30 வயதைத் தாண்டியவர்களுக்கு அதிகரிக்கும் மாரடைப்பு.. இதயப் பிரச்னைகள் அதிகரிப்பதற்கான காரணங்கள்!
Heart Attack: 30 வயதைத் தாண்டியவர்களுக்கு அதிகரிக்கும் மாரடைப்பு.. இதயப் பிரச்னைகள் அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.
Heart Attack: கடந்த காலங்களில், மாரடைப்பு என்பது 'முதுமைக் காலங்களில்’ வரும் நோய் என்று சொல்லப்பட்டது. ஏனெனில் 60 மற்றும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பொதுவாக மாரடைப்பால் பெரும்பாலும் பாதிக்கப்படுவார்கள். அரிதாக, 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
ஆனால், அது தற்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது. இது பொதுமக்களை மட்டுமின்றி மருத்துவ துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, மன அழுத்தம், உட்கார்ந்த வாழ்க்கை முறை, உடல் செயல்பாடு இல்லாமை மற்றும் தூக்கமின்மை ஆகியவை மாரடைப்புக்கு எளிதில் வழிவகுக்கும்.
உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் உயர் கொழுப்பு அளவு ஆகியவை இளைஞர்களிடையே அதிகரித்து வருகின்றன. புகைப்பிடித்தல், புகையிலை நுகர்வு, போதைப் பழக்கம் போன்ற தீயப் பழக்கங்கள் இதற்கு பங்களிக்கின்றன. அதனால்தான் இதய பிரச்னைகளைக் கட்டுப்படுத்த சீரான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது மிக முக்கியம்.
இதுகுறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்துக்கு, மும்பை சர் எச்.என் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையின் இதயநோய் நிபுணர் டாக்டர் பிபின் சந்திர பாம்ரே, இளைஞர்களிடையே மாரடைப்பு அதிகரிப்பதற்கான 4 காரணங்களை எடுத்துரைத்தார்.
மாரடைப்பு அதிகரிப்பதற்கான நான்கு காரணங்கள்:
நீரிழிவு நோய்:
உயர் ரத்த சர்க்கரை அளவு உடலின் ரத்த நாளங்களை சேதப்படுத்தும் மற்றும் தமனிகளில் கொழுப்பு குவிந்து சீரான இரத்த ஓட்டத்தை சீர்குலைக்கிறது. இது இதயத்திற்கு சேதத்தை ஏற்படுத்தி மாரடைப்புக்கு வழிவகுக்கும்.
உயர் ரத்த அழுத்தம்:
உயர் ரத்த அழுத்தம் இதய தசைகளைத் தடிமனாக்குகிறது. இது இதயத்தின் செயல்பாடுகளைத் தொந்தரவு செய்கிறது. இது மாரடைப்பு வீதத்தையும் அதிகரிக்க வழிவகுக்கும்.
உடல் பருமன்:
அதிக எடை மற்றும் உடல் பருமன் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆல்கஹால் குடிப்பது மற்றும் போதிய தூக்கம் இல்லாதது இளைஞர்களில் கொழுப்பு குவிப்பை அதிகரிக்கிறது. அதனால்தான் முடிந்தவரை உடல் எடையைக் குறைப்பது மற்றும் இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் கவனம் செலுத்துவது முக்கியம்.
புகைப்பிடித்தல்:
புகைப்பிடித்தல் இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய ஆபத்து காரணிகளாகும். சிகரெட் புகையில் உள்ள ரசாயனங்கள், தமனிக்குள் ரத்தத்தை தடிமனாக்கி உறைதலை ஏற்படுத்துகின்றன.
இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பது எப்படி?:
மருத்துவர் பிபின் சந்திர பாம்ரே இதய ஆரோக்கியத்தைப் பராமரிப்பது குறித்து அறிவுறுத்துகிறார். அதில், "இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரோக்கியமாக இருப்பது மற்றும் இதய நட்பு பழக்கங்களை வளர்ப்பது மிகவும் முக்கியம்.
ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள். ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிட உடல் செயல்பாடுகளுக்கு நேரம் கொடுங்கள். சத்தான உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.
ஜங்க் உணவுகள், எண்ணெய் உணவுகள், பதப்படுத்தப்பட்ட மற்றும் ரெடிமேடு உணவுகளை முடிந்தவரை தவிர்க்கவும். உப்பு உட்கொள்ளலைக் குறைக்கவும்.
மருத்துவரின் ஆலோசனைப்படி, அவ்வப்போது ரத்தத்தில் கலக்கும் சர்க்கரை அளவை சரிபார்க்கவும். ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை சரிபார்க்கவும். நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் தொடர்பான மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டாம்.
யோகா, தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுங்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி இதய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
நம் ஆரோக்கியம் நம் கையில் தான் இருக்கிறது. ஆரோக்கியத்தைப் பராமரிக்க எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் முக்கியம்’’ எனத் தெரிவித்தார்.
டாபிக்ஸ்