Health Drinks : உங்கள் குழந்தைகளுக்கு பூஸ்ட், ஹார்லிக்ஸி, போர்ன்விட்டா கொடுப்பவரா? இத படிங்க மொதல்ல!
Health Drinks : இப்போது இயற்கை ஆர்வம் மற்றும் வாழ்வியல் முறை பிரபலமடைந்து வரும் காலத்தில், இயற்கை அங்காடிகள் இவற்றை தயாரித்து கொடுக்கின்றன. சிறிய அளவில் தரமானவற்றை தயாரித்துக்கொடுப்பவர்களிடம் தேடிச்சென்று வாங்கி பயன்பெறலாம்.
போர்ன்விட்டா, ஹார்லிக்ஸ், பூஸ்ட் போன்ற வியாபாரப் பொருட்களை "சுகாதாரமான திரவபானம்" என அழைக்க முடியாது என இந்திய உணவு பாதுகாப்புக் கழகம் (FSSAI) அறிவித்துள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கழகம் ஏப்ரல்-2, 2024ல் இந்தியாவிலுள்ள மின்வணிக (E commerce) இணையதளங்களுக்கு, இந்தியாவில், "சுகாதார திரவபானம்" என்பது முறையாக வரையறுக்கப்படவில்லை என்றும், 2006 உணவு பாதுகாப்பு/தரச் சட்டங்களிலும், அதைப்பற்றி தெளிவான கருத்துகள் ஏதும் இல்லை என்பதாலும், எந்த ஒரு பொருளையும்,"சுகாதார திரவபானம்"என அச்சிட்டு விற்பனை செய்யக்துடாது எனத் தெளிவாக கூறியதை அடுத்து, இந்திய அரசும், அதே வழிகாட்டுதலை நாட்டில் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் மால்ட் கலந்த குளிர்பானங்கள் பல காலங்களாக பருகப்பட்டு வந்தாலும்,14.4 பில்லியன் ரூபாய் சந்தையில்,70 சதவீதம் அங்கம் வகிக்கும் ஹார்லிக்ஸ், பூஸ்ட், போர்ன்விட்டா போன்றவற்றில் மால்ட் அதிகம் உள்ளது.
நிபுணர்களில் சிலர் மால்ட் கலந்த பானங்கள் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களாக (Ultra Processed Food) கருதப்பட வேண்டும் என்றும், அவற்றை தொடர்ந்து குடித்துவந்தால், சிறு குழந்தைகள் மத்தியில் உடல் பருமன், சர்க்கரைநோய் பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக தெரிவித்ததுடன், ஹார்லிக்ஸ், பூஸ்ட், போர்ன்விட்டா போன்ற பொருட்களில் உள்ள சர்க்கரையின் (Sugar) அளவு, பரிந்துரைக்கப்பட்ட அளவைக் காட்டிலும், 3 மடங்கு அதிகம் இருப்பதால், அவற்றை எப்படி "சுகாதாரமான திரவபானம்"என சந்தையில் விற்பதை அனுமதிக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஹார்லிக்ஸ், பூஸ்ட், போர்ன்விட்டா போன்றவற்றை, அதை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்கள், இவை "சுகாதார பானங்கள்"(Health Drinks) என்றும், அதை தொடர்ந்து குடித்தால்"உடல் பலமாகவும், உடம்பு உயரமாகவும், மூளைத்திறன் அதிகரிப்பதாகவும்"விளம்பரம் செய்து, லாபங்களை கோடிகளில் ஈட்டி வருகின்றன.
சில ஆண்டுகளுக்கு முன், அரசு, 24 மாதத்திற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு, செயற்கை உணவு (Infant formula food) அல்லது பால் பொருட்கள் விளம்பரத்தை தடை செய்ததன் காரணமாக, தாய்ப்பால் கொடுப்பது, வீட்டிலேயே சத்துமாவு தயாரித்து வளரும் குழந்தைகளுக்கு கொடுப்பது அதிகரித்து, நல்ல சுகாதார பலன்களைக் கொடுத்தது.
நொறுக்குத்தீனி பண்டங்களைக் கூட வணிக நிறுவனங்கள் "சுகாதாரமானவை" என விளம்பரம் செய்து அதிக லாபத்தை ஈட்டுகின்றன. எனினும், அவற்றில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்பதை வெளியிட மறுக்கிறது.
ஐஸ்கிரீம்களில் உள்ள சர்க்கரையின் அளவு, அதன் உறையில் பட்டியலிட வேண்டும் எனும் விழிப்புணர்வு பெருகி வருகிறது.
போர்ன்விட்டா நிறுவனமோ, அதன் தயாரிப்புகளில் அதிக சர்க்கரை உள்ளது என ஆதாரங்களுடன் வெளியிட்ட நபர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது. கேள்விகளுக்கு விடையளிக்காது, வழக்குப்பதிவு செய்வது என்பது சரியான போக்காக இருக்க முடியுமா?
சுருக்கமாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிறுவனம், சுகாதாரத்தை பாதிக்கும் பொருட்கள் மீது தேவையான விதிகளைக் கொண்டு வந்து, கட்டுப்படுத்தவும், அதை மேற்பார்வை செய்யவும் விரைந்து முன்வர வேண்டும். அப்போது தான் மக்கள் நலன் மற்றும் சுகாதாரம் மேம்படும்.
நமது அருகில் உள்ள கடைகளிலே எளிமையாக கிடைக்கும் பொருட்களை வைத்து நாமே வீட்டில் சுகாதாரமான முறையில் சுகாதார பானங்களை தயாரித்துக்கொள்ள முடியும் அல்லது இப்போது இயற்கை ஆர்வம் மற்றும் வாழ்வியல் முறை பிரபலமடைந்து வரும் காலத்தில், இயற்கை அங்காடிகள் இவற்றை தயாரித்து கொடுக்கின்றன. சிறிய அளவில் தரமானவற்றை தயாரித்துக்கொடுப்பவர்களிடம் தேடிச்சென்று வாங்கி பயன்பெறலாம்.
நன்றி – மருத்துவர். புகழேந்தி.
டாபிக்ஸ்